சோயா, நிலக்கடலை உற்பத்தி அதிகரிப்பு!

Webdunia

செவ்வாய், 30 அக்டோபர் 2007 (18:25 IST)
இந்த வருடம் கரிப் பருவத்தில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது.

இந்த வருடம் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்ததால், சோயா பயிரிடப்படும் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உற்பத்தி அதிகரித்துள்ளது.

இதே போல் நிலக்கடலை அதிகளவு பயிரிடப்படும் குஜராத் மற்றும் தென் மாநிலங்களிலும் உற்பத்தி அதிகரித்துள்ளது.

எண்ணெய் வித்து உற்பத்தி சென்ற வருடத்தைவிட 25 விழுக்காடு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நாக்பூரில் இந்திய சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம், இந்திய சோயா உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் எண்ணெய் உற்பத்தியாளர்கள், எண்ணெய் வித்து வர்த்தகர்கள் உட்பட 300 க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பல்வேறு தரப்பினரும் தெரிவித்த கருத்துக்கு பிறகு, இந்த வருடம் கரீப் பருவத்தில் 168.3 லட்சம் டன் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியாகும் என மதிப்பிடப்பட்டது. (கரிப் பருவத்தில் 134.5 லட்சம் டன் உற்பத்தியாகும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது).

இதில் சோயா 94.6 லட்சம் டன் உற்பத்தியாகும். சில எண்ணெய் வித்து வர்த்தகர்கள் சோயா உற்பத்தி 100 லட்சம் டன்னை தாண்டும் என்று கூறுகின்றனர். சென்ற வருடம் 79.6 டன் சோயா உற்பத்தியானது.

மகாராஷ்டிரா மாநிலத்தில், குறிப்பாக விதர்பா பகுதியில் 32 லட்சம் டன் உற்பத்தியாகும். மத்திய பிரதேசத்தில் 50 லட்சம் டன், ராஜஸ்தானில் 7.5 லட்சம் டன் உற்பத்தியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் சோயாவின் விலை அதிகரித்துள்ளது. இந்தியாவில் சென்ற வருடம் 1 டன் சோயா மொச்சை ரூ. 12,000 க்கு விற்பனையானது. இதன் விலை இந்த வருடம் 15 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இந்த வருடம் நிலக்கடலை 52.7 லட்சம் டன் உற்பத்தியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சென்ற கரிப் பருவத்தில் 35 லட்சம் டன் உற்பத்தியானது.

இதில் குஜராத் மாநிலத்தில் 21 லட்சம் டன்னும், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மூன்று தென் மாநிலங்களையும் சேர்த்து 21.5 லட்சம் டன் உற்பத்தியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் மத்திய விவசாய அமைச்சகம் இந்த வருடம் 90.4 லட்சம் டன் எண்ணெய் வித்து உற்பத்தியாகும் என மதிப்பிட்டுள்ளது.

எப்பிடியிருப்பினும் இந்த வருடம் சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தேவையான எண்ணெய் வித்து பற்றாக்குறை இல்லாமல் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.சமையல் எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கும்.

தற்போது இந்தியாவில் தேவைப்படும் சமையல் எண்ணெய் உற்பத்தி ஆவதில்லை. இதனால் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த பற்றாக்குறையை சமாளிக்கவும், சமையல் எண்ணெய் விலை அதிகரிக்காமல் இருக்கவும் மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து பாமாயிலும், அமெரிக்காவில் இருந்து சோயா எண்ணெய்யும் இறக்குமதி செய்யப்படுகிறது.
சென்ற ஆண்டு 50 லட்சம் டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது.

இந்த வருடம் உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பதால் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் அளவு குறைய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இறக்குமதிக்காக செலவழிக்கும் அந்நியச் செலவாணி மீதமாகும்.

இந்தியாவில் சோயா மொச்சையில் இருந்து எண்ணெய் எடுத்த பிறகு, சோயா பிண்ணாக்கு வெளிநாடுகளுக்கு கால்நடை தீவனமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இநத ஆண்டு 40 லட்சம் டன் சோயா பிண்ணாக்கு ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் கூறுகின்றன.










வெப்துனியாவைப் படிக்கவும்