கரும்புக்கான பணம் 3 வாரத்திற்குள் வழங்கு-உயர்நீதி மன்றம்.

Webdunia

வியாழன், 27 செப்டம்பர் 2007 (10:24 IST)
சர்க்கரை ஆலைகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த கரும்புக்கான நிலுவைத் தொகையை, மூன்று வாரத்திற்குள் வழங்குவதை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சர்க்கரை ஆலைகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த கரும்பிற்கான விலையை கொடுக்காமல், நீண்ட நாட்கள் பாக்கி வைத்துள்ளன. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 1,700 கோடி பாக்கி வைத்துள்ளனர்.

கரும்புக்கான விலையை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்தின் போது, அரசியல் கட்சி தலைவர்கள், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து,வாழ்த்தி பேசி விட்டு சென்றவிடுகின்றனர். கரும்பு விவசாயிகளின் பிரச்சனை ஒவ்வொரு தேர்தலிலும் எதிரொலிக்கிறது. எல்லா அரசியல் கட்சிகளும் இனிக்க, இனிக்க வாக்குறுதிகளை வாரி வழங்குகின்றனர். தேர்தலில் வெற்றி பெற்று, வெற்றியை கொண்டாடுவதற்கான இனிப்புகளை வழங்கியதுடன்,
கரும்பு விவசாயிகளின் பிரச்சனையையும் மறந்து விடுகின்றனர்.

நாட்டு மக்களுக்கு எல்லாம் இனிப்பை வழங்கும் கரும்பு விவசாயிகளின் நிலையோ, வேம்பாய் கசக்கிறது.

உள்நாட்டு கரும்பு உற்பத்தி குறைந்து, சர்க்கரையின் உற்பத்தி குறையும் போது, பற்றாக் குறையை ஈடுகட்ட, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய காட்டும் ஆர்வத்தை - மத்திய, மாநில ஆட்சியாளர்களும் சரி, அரசு அதிகாரிகளும், கரும்பு விவசாயிகளுக்கு, குறிப்பிட்ட காலத்தில், நியாயமான விலையை பெற்றுத் தருவதில் காட்டுவதில்லை.

விவசாயிகள் போராடும் போது, கொடுக்கப்படும் வாக்குறுதிகள் எல்லாமகடற்கரை மணலில் எழுதிய கவிதையாகவே கரைந்து போகின்றன.

இது தான் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் உள்ள, கரும்பு விவசாயிகளின் நிலைமை.

உத்தரபிரதேச கிசான் மஜ்தூர் சங்கதான், என்ற விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த வி.எம். சிங் என்பவர், கரும்பு விவசாயிகளுக்கு, சர்க்கரை ஆலைகள் நிலுவையில் வைத்துள்ள பணத்தை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி அலகபாத் உயர்நீதி மன்றத்தில், ஆகஸ்ட் 10 ந் தேதி வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகளைக் கொண்ட லக்னோ அமர்வு நீதி மன்ற நீதிபதிகள் சஜ்சய் மிஸ்ரா, ராஜூவ் சர்மா ஆகியோர் விசாரித்து தீர்ப்பு வழங்கினார்கள்.

நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியிருப்பதாவது, உத்தரபிரதேச மாநில அரசு, கரும்பு விசாயிகளுக்கு, சர்க்கரை ஆலைகள், நிலுவை வைத்துள்ள முழுத் தொகையையும், மூன்று வாரங்களுக்குள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு வழங்க தவறும் எல்லா சர்க்கரை ஆலைகள் மீதும், மாநில அரசு நிலுவையை வசூல் செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

அத்துடன் மாநில அரசு, இந்த உத்தரவு அமல்படுத்தி இருப்பது பற்றிய அறிக்கையை, காலக்கெடு முடிந்த ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த உத்தரவு அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும் பொருந்தும் என்று தீர்ப்பில் கூறியுள்ளனர்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபர் 23 ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்