மாவட்டங்களில் முதுகலை கல்விப்பதிவு!

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (15:43 IST)
முதுகலை கல்வித் தகுதியை பதிவு செய்ய அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலேயே விண்ணப்பிக்கலாம் என்று வேலைவாய்ப்பு பயிற்சித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் ஏ.எஸ்.ஜீவரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பொறியியல், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி பட்டப் படிப்பையும், முதுகலை பட்டத்தையும் பதிவு செய்வதற்காக பிற மாவாட்டத்தினர், சென்னையில் உள்ள மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வர வேண்டியுள்ளது. இதனால், கால விரயமும், பொருட்செலவும் உண்டாகிறது.

இதைத் தவிர்க்க தொழிற்கல்வி பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலேயே தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்.

அங்கு பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் சென்னை அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கும். அந்த விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு, பதிவு அட்டை அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

எந்த மாவட்டத்தில் பதிவு செய்தாலும் விண்ணப்பதாரரின் பதிவு மூப்பு பாதிக்காது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு ஆவணங்களை எந்த தேதியில் மனுதாரர் அளிக்கிறாரோ, அன்றில் இருந்து பதிவு மூப்பு வழங்கப்படும். பதிவுக்கான விண்ணப்ப படிவம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலேயே கிடைக்கும்.

இவ்வாறு ஜீவரத்தினம் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்