இந்தியாவில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள்!

செவ்வாய், 15 ஜூலை 2008 (16:08 IST)
மும்பை: வெளிநாடுகளில் உள்ள புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்து வெளியேறும் மாணவர்கள், வேலைக்காக வேறு நாடுகளுக்கு செல்லும் நிலைமாறி, இன்று அவர்கள் இந்தியாவை முற்றுகையிடத் தொடங்கி உள்ளனர்.

லண்டனில் உள்ள பழமை வாய்ந்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களில் படித்து பட்டம் பெற்ற மாணவர்களில் பலர், தற்போது இந்தியாவில் கால் பதிப்பதையே விரும்புகின்றனர்.

இந்தியாவில் உள்ள பரந்து வளர்ந்த வாய்ப்புகள் மற்றும் சந்தை ஆகியன, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் வர்த்தகம் படிக்கும் மாணவர்களைப் பெரிதும் ஈர்த்துள்ளது.

அபரீதமாக வளர்ச்சி கண்டு வரும் தொழில் நிறுவனங்கள், சர்வதேசத் தரத்தை ஒத்த பணி புரியும் சூழல்கள், கை நிறைய சம்பளம் போன்றவை வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்களை தாயகம் திரும்பத் தூண்டி வருகிறது.

இதையொட்டி தங்கள் மாணவர்களின் நலனைக் கருதி, இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து, வேலைக்கான ஆளெடுப்பு முகாம்களுக்கு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்து தருகிறது.

இதன்படி வரும் 30, 31-ஆம் தேதிகளில் மும்பையில் நேரடி வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

இத்தகைய முகாம்கள், வெளிநாட்டு மாணவர்களின் 'இந்தியக் கனவு' நிறைவேற உதவுவதுடன், நம் நாட்டின் பெருமையையும் உலகுக்கு உணர்த்துவதாக உள்ளது என்பதில் ஐயமில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்