பொ‌றி‌யிய‌ல் : சுயநிதி கல்லூரி கட்டணம் ரூ.62,500

வெள்ளி, 6 ஜூன் 2008 (14:11 IST)
சுயநிதி பொறியியற் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக் கழகம் நடத்தும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் இல்லாமல் பிற வகைகளில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.62,500 கல்விக் கட்டணம் என நீதிபதி என்.வி. பாலசுப்ரமணியன் தலைமையிலான குழு நிர்ணயம் செய்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பு வருமாறு :

2008 - 2009-ஆம் கல்வியாண்டில் தனியார் சுயநிதி பொறியியற் கல்லூரிகளில் அரசு நடத்தும் ஒற்றை சாளர முறையில் ஒதுக்கீடு மற்றும் கல்லூரி நிர்வாகத்தால் செய்யப்படும் மாணவர் சேர்க்கை மூலம் பொறியியற் கல்லூரியில் சேரும் மாணவர்கள் செலுத்திட வேண்டிய ஆண்டுக் கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்காக, நீதிபதி பாலசுப்ரமணியன் தலைமையில் குழு ஒன்றினை அரசு அமைத்துள்ளது.

அக்குழு கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்காக, சுயநிதி பொறியியற் கல்லூரிகளின் கூட்டமைப்பு, சுயநிதி பொறியியற் கல்லூரிகளின் தலைவர்கள், கல்வியாளர்கள், பொது மக்கள் ஆகியவர்களிடமிருந்து கல்விக் கட்டண நிர்ணயம் குறித்தான கருத்துக்களை பெற்றது.

மேலும், சுயநிதி கல்லூரிகளின் நிர்வாகத்தினரிடமிருந்து வரவு செலவு கணக்குகள் மற்றும் அவர்கள் கோரும் கல்விக் கட்டண விவரங்கள் ஆகியவற்றை அறிக்கை வாயிலாக பெற்றது.

அதனடிப்படையில், வரும் கல்வியாண்டில் (2008 - 2009-ஆம் ஆண்டில்) தனியார் சுயநிதி பொறியியற் கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்வி கட்டணத் தொகையை இக்குழு கீழ்க்கண்டவாறு நிர்ணயம் செய்துள்ளது.

சுயநிதி பொறியியற் கல்லூரிகளிலுள்ள மாணவர்கள் சேர்க்கை இடங்களை அரசு மற்றும் கல்லூரி நிர்வாக ஒதுக்கீடு இடங்களாக முறையே சிறுபான்மை யினோரல்லாத பொறியியற் கல்லூரிகள் 65:35 என்ற விகிதத்திலும் சிறுபான்மையினரால் நடத்தப்படும் பொறியியற் கல்லூரிகள் 50:50 என்ற விகிதத்திலும் நிரப்பிக் கொள்ளத்தக்க வகையில் தங்களுடைய உடன்பாட்டினை கல்லூரிகளின் கூட்டமைப்பினர் இக்குழுவிடம் தெரிவித்தனர்.

2008 - 2009-ஆம் கல்வியாண்டில் சென்னை, அண்ணா பல்கலைக் கழகத்தால் நடத்தப்படும் ஒற்றைச் சாளர கலந்தாய்வில் கலந்து கொண்டு ஒதுக்கீடு பெற்று சுயநிதி பொறியியற் கல்லூரிகளில் சேரும் மாணவர்களைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு செலுத்திய கல்விக் கட்டணமே இவ்வாண்டும் தொடரும்.

சுயநிதி பொறியியற் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக் கழகம் நடத்தும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் இல்லாமல் பிற வகைகளில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.62,500 கல்விக் கட்டணம் என நீதிபதி என்.வி. பாலசுப்ரமணியன் தலைமையிலான குழு நிர்ணயம் செய்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

மாணவர் சேர்க்கை முறை கல்விக் கட்டணம்

அரசின் சார்பாக அண்ணா பல்கலைக் கழகம் சென்னை ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் சுயநிதி பொறியியற் கல்லூரிகளின் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு (ஆண்டொன்றுக்கு)

1) தரச் சான்று பெறாத பாடப் பிரிவுகளுக்கு ரூ.32,500,

2) தரச்சான்று பெற்ற பாடப்பிரிவுகளுக்கு ரூ.40,000

அண்ணா பல்கலைக் கழக ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் இல்லாமல் பிற வகைகளில் சுயநிதி பொறியியற் கல்லூரிகளில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு (ஆண்டொன்றுக்கு) ரூ.62,500

வெப்துனியாவைப் படிக்கவும்