மாணவர் விசா : பிரிட்டிஷ் கவுன்சில் மறுபரிசீலனை!

திங்கள், 17 டிசம்பர் 2007 (12:35 IST)
இங்கிலாந்தில் படிப்பதற்காக விண்ணப்பித்து அதற்கான விசா மறுக்கப்பட்ட மாணவர்கள் மேல் முறையீடு செய்யலாம் என்றும், அது பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என்றும் சென்னையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் கூறியுள்ளது!

விசா மறுக்கப்பட்ட மாணவர்கள், சென்னையில் உள்ள பிரிட்டிஷ் துணைத் தூதர் அலுவலகத்தில் உள்ள விசா அலுவலரை நாளை மறுநாள் (19.12.2007) சந்திக்கலாம் என்று பிரிட்டிஷ் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பிரிட்டனில் படிப்பதற்காக விசா கேட்டு விண்ணப்பித்து பிரிட்டிஷ் துணைத் தூதரகத்தால் மறுக்கப்பட்டவர்கள் மட்டும் விசா அலுவலரைச் சந்திப்பதற்கு நேர நிர்ணயம் செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். விசா மறுக்கப்பட்ட 28 நாட்களுக்குள் இந்த மேல் முறையீடு செய்யப்பட வேண்டும்,

மேல் முறையீடு செய்யும் மாணவர்கள் அதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கம்பெற சென்னையில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தை 044 - 42050600 / 622 அல்லது மின்னஞ்சல் : [email protected] 18 ஆம் தேதி டிசம்பர் 4 மணிக்குள் தொடர்புகொள்ள வேண்டும்.

விசா அலுவலரைச் சந்திக்க நேரம் அளிக்கப்படும் மாணவர்கள் கீழ்க்கண்ட ஆவணங்களை கொண்டுவர வேண்டும் :

1) முழுமையாக நிரப்பப்பட்ட AIT2 மேல்முறையீடு படிவம், அதனுடன் விசா மறுப்பு தாக்கீதையும் கொண்டுவர வேண்டும்.

2) கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்)

3) விசா நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களைக் கூறும் ஆவணங்கள்.

4) படிக்கப் போகும் கல்வி தொடர்பான விவரங்கள்.

வரும் 20 ஆம் தேதி சென்னையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சிலில் மாணவர் விசா குறித்து ஒரு கருத்தரங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்