செல்பேசியில் பாடம்: 'இக்னோ' புதுமை!

திங்கள், 29 செப்டம்பர் 2008 (14:25 IST)
நீங்கள் இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழக (இக்னோ) மாணவரா? அப்படியானால் உங்களுக்குத்தான் இந்த இனிப்பான செய்தி! 'இக்னோ'வின் சேவைகளை இனி செல்பேசி வாயிலாகவும் நீங்கள் பெற முடியும்.

வெளிநாடுகளில் உள்ள, அல்லது தொலைதூரத்தில் இருக்கும் மாணவர்கள் பயன்பெறும் நோக்கில், நாட்டிலேயே முதலாவதாக இந்த புதுமையை, சோதனை அடிப்படையில் இக்னோ மேற்கொள்கிறது. இச்சேவையின் முதற்கட்டம் அடுத்த 2 வாரங்களில் தொடங்கப்பட்டுவிடும்.

இதுகுறித்து இக்னோவின் கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை மூத்த பேராசிரியர் பி.வி. சுரேஷ் கூறும்போது, "குறுந்தகவல் சேவைகள் (எஸ்.எம்.எஸ்.) வாயிலாக இக்னோ பாடங்களை மாணவர்கள் எளிதில், உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் மாணவர்களின் கால நேரம் விரையமாவது தவிர்க்கப்படும்" என்றார்.

"இத்திட்டம் 3 கட்டங்களாகச் செயல்படுத்தும் வகையில், அதற்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டம் 15 நாட்களில் தொடங்கும். இக்னோ நடத்தும் பாடங்கள் தொடர்பான தகவல்கள் ஒரே நேரத்தில் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்" என்று அவர் மேலும் விவரித்தார்.

இதன் பின்னர் பாடங்கள், தேர்வுகள், அது தொடர்புடைய பிற சந்தேகங்களை குறுந்தகவல்களை அனுப்பி, மாணவர்கள் அதற்குரிய விளக்கங்களை பெறலாம். மூன்றாவது கட்டத்தில் தங்களைப் பற்றிய விவரங்களை மாணவர்கள் முழுமையாகப் பெற்றிருப்பார்கள் என்றார் அவர்.

"இக்னோ நடத்தும் பாடங்கள், தேர்வுகள், அது தொடர்பான தேதிகள், பாடக் கட்டணம் உள்ளிட்ட தகவல்களும் இந்த செல்பேசி சேவையில் அளிக்கப்படவிருக்கிறது. பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இச்சேவையில், நம்பகத் தன்மையும் தனிநபர் சுதந்திரமும் உறுதி செய்யப்படுகிறது" என்று சுரேஷ் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்