விடுதலைப் புலிகளுக்கு உயிர் கொடுக்க பிரிவினைவாதிகள் முயல்கிறார்கள்

திங்கள், 24 மார்ச் 2014 (22:39 IST)
அமைதி நிலவுகின்ற இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு உயிர் கொடுக்க வெளிநாடுகளில் உள்ள பிரிவினைவாதிகள் முனைந்திருப்பதைத் தடுப்பதற்காகவே தேடுதல் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்று இலங்கை இராணுவ தளபதி கூறியுள்ளார்.
 
FILE


பொதுமக்களை அச்சப்படுத்துவதற்காக இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்று திங்களன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்த இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

அழிக்கப்பட்டுள்ள எல்ரீரீயினர் மீண்டும் தலையெடுப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது. இதனை நாங்கள் தெளிவாகத் தெரிவித்திருக்கின்றோம். தேசிய பாதுகாப்புக்கு நாட்டில் முதலிடம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. தேசிய பாதுகாப்புக்கு அடுத்ததாகவே ஏனைய விடயங்கள் கவனத்தைப் பெறுகின்றன. எனவே தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிப்பதற்கு எவரும் முயற்சித்தால், பொதுமக்கள் அதுபற்றி தங்கள் கிராமப்பகுதிகளில் உள்ள இராணுவத்தினர் அல்லது பொலிசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். நாங்கள் அவர்களை உடனடியாகக் கைது செய்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று கிளிநொச்சியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது தெரிவித்திருக்கின்றார்.

யுதத காலத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் 23 பேருக்கு தலா ஒரு லட்சம் வீதம் கொடுப்பனவு வழங்கிய இராணுவத் தளபதி, 107 குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு பசு மாடுகளை வழங்கியுள்ளார்.

அத்துடன் கிளிநொச்சியின் பல பகுதிகளையும் சேர்ந்த 21 பேருக்குக் காணிகளையும் வழங்கியுள்ளார்.

இராணுவத்தின் பயன்படுத்தி வந்த பொதுமக்களின் காணிகள் பெருமளவில் உரியவர்களுக்கு கையளிக்கப்பட்டு வருகின்றன. சில இடங்களில் காணிகளுக்கு உரிமை கோரி பலர் வருகின்றனர். அவர்களுக்கு இராணுவத்தினர் தாங்கள் விரும்பியவாறு காணிகளை வழங்க முடியாது. ஏனெனில் பலர் பலர் அரச காணிகளையும் உரிமை கோரி வருகின்றார்கள். காணிகளை வழங்குவதற்கென கிராம சேவகர், பிரதேச செயலாளர், காணி அதிகாரிகள், மாகாணசபையினர் என பலதரப்பட்டவர்கள் இருக்கின்றார்கள். அவர்களின் பங்களிப்போடு காணிகளுக்கு உரிமை கோருகின்றவர்கள் சரியான உண்மையான உரிமையளார்கள்தானா என்பதை உறுதி செய்ததன் பின்பே வழங்கப்படும் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவின் அழைப்பின் பேரில் கிளிநொச்சி இராணுவ முகாமில் பொதுமக்கள் குறிப்பாக பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தத்தக்க வகையில் அமைக்கப்பட்டுள்ள டென்னிஸ் விளையாட்டரங்கம் ஒன்றையும் இராணுவ தளபதி திறந்து வைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்