டிச.7இல் அலிகார் பல்கலை. செல்கிறார் ராகுல்

வியாழன், 3 டிசம்பர் 2009 (13:17 IST)
ஹாத்ராஸ்: உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பல்கலைக்கழகத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், அமேதி எம்.பி.யுமான ராகுல் காந்தி வரும் 7ஆம் தேதி செல்லவிருக்கிறார்.

அங்கு பல்கலைக்கழக மாணவ-மாணவிகளுடன் ராகுல் கலந்துரையாடலில் பங்கேற்கிறார்.

அலிகார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பி.கே. அப்துல் அஜீஸ் அழைப்பை ஏற்று ராகுல் காந்தி டிசம்பர் 7ஆம் தேதியன்று செல்லவிருப்பதாக பல்கலைக்கழகத்தின் செய்தித்தொடர்பாளர் ரஹாத் அப்ரார் தெரிவித்துள்ளார்.

அலிகார் பல்கலைக்கழகத்திற்கு ராகுல் செல்வது இதுவே முதல்முறை.

பல்வேறு பாடப் பிரிவைச் சேர்ந்த 800 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, ராகுல் காந்தியிடம் கலந்துரையாட உள்ளனர்.

உயர் கல்வியை பயிலும் மாணவர்களுக்கு ராகுல் காந்தி ஊக்கம் அளிப்பார் என்று அப்ரார் கூறினார்.

அலிகார் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் சர் சயீத் அகமதுவின் சமாதி அமைந்துள்ள ஜூம்மா மசூதிக்குச் செல்லும் ராகுல் காந்தி, அங்கு அஞ்சலி செலுத்துகிறார்.

பின்னர் லக்னோவில் உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் வரும் 8ஆம் தேதியன்று ஆலோசனை நடத்துகிறார்.

காங்கிரஸ் கட்சியின் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு குறித்து ராகுல் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்