மானிடத் தன்மையைக் கொண்டு - பலர் வையத்தை ஆள்வது நாம்கண்ட துண்டு மானிடத் தன்மையை நம்பி - அதன் வன்மையி னாற்புவி வாழ்வுகொள் தம்பி! "மானிடம்" என்றொரு வாளும் - அதை வசத்தில் அடைந்திட்ட உன்இரு தோளும் வானும் வசப்பட வைக்கும் - இதில் வைத்திடும் நம்பிக்கை, வாழ்வைப் பெருக்கும் மானிடத் தன்மையைக்...
மானிடன் வாழ்ந்த வரைக்கும் - இந்த வையத்திலே அவன் செய்த வரைக்கும் மானிடத் தன்மைக்கு வேறாய் - ஒரு வல்லமை கேட்டிருந்தால் அதைக் கூறாய்! மானிடம் என்பது புல்லோ? - அன்றி மரக்கட்டை யைக்குறித் திடவந்த சொல்லோ? கானிடை வாழ்ந்ததும் உண்டு - பின்பு கடலை வசப்படச் செய்ததும் அதுதான்! மானிடத் தன்மையைக்...
மானிடம் போற்ற மறுக்கும் - ஒரு மானிடன் தன்னைத்தன் உயிரும் வெறுக்கும்; மானிடம் என்பது குன்று - தனில் வாய்ந்த சமத்துவ உச்சியில் நின்று மானிடருக் கினி தாக - இங்கு வாய்த்த பகுத்தறி வாம்விழி யாலே வான்திசை எங்கணும் நீபார்! - வாழ்வின் வல்லமை யுமானிடத் தன்மைருஎன் றதேர்! மானிடத் தன்மையைக்...