நெஞ்சு பொறுக்கு திலையே! - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால், அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார் துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத் துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார். (நெஞ்சு பொறுக்கு)
மந்திர வாதி என்பார் - சொன்ன மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார், யந்திர சூனி யங்கள் - இன்னும் எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்! தந்த பொருளைக் கொண்டே - ஜனம் தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம அந்த அரசியலை - இவர் அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார். (நெஞ்சு பொறுக்கு)
சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் - ஊர்ச் சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார், துப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிவார், அப்பால் எவனோ செல்வான் - அவன் ஆடையைக் கண்டுபயந் தெழுந்து நிற்பார், எப்போதும் கைகட்டுவார் - இவர் யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார். (நெஞ்சு பொறுக்கு)
நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால், கொஞ்சமோ பிரிவினைகள்? - ஒரு கோடிஎன் றால் அது பெரிதா மோ? ஐந்துதலைப் பாம்பென் பான் - அப்பன் ஆறுதலை யென்றுமகன் சொல்லி விட்டால் நெஞ்சு பிரிந்திடுவார் - பின்பு நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார். (நெஞ்சு பொறுக்கு)
சாத்திரங்கள் ஒன்றும் காணார் - பொய்ச் சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே கோத்திரம் ஒன்றா யிருந்தாலும் - ஒரு கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார், தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் - தமைச் சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார, ஆத்திரங் கொண்டே இவன் சைவன் - இவன் அரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடுவார். (நெஞ்சு பொறுக்கு)
நெஞ்சு பொறுக்கு திலையே - இதை நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே, கஞ்சி குடிப்பதற் கிலார் - அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார் பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்துத் துஞ்சி மடிகின் றாரே - இவர் துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே. (நெஞ்சு பொறுக்கு)
எண்ணிலா நோயுடையார் - இவர் எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார் கண்ணிலாக் குழந்தை கள்போல் - பிறர் காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார், நண்ணிய பெருங்கலைகள் - பத்து நாலாயிரங் கோடி நயந்துநின்ற புண்ணிய நாட்டினிலே - இவர் பொறியற்ற விலங்குகள்போல வாழ்வார். (நெஞ்சு பொறுக்கு)