ஹிதேந்திரன் படத்திற்கு அஞ்சலி

திங்கள், 29 செப்டம்பர் 2008 (20:50 IST)
விபத்தில் உயிரிழந்த திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த ஹிதேந்திரனின் இதயம் பெங்களூரு சிறுமிக்குப் பொருத்தப்பட்ட நிலையில், அந்த சிறுமியின் பெற்றோர், ஹிதேந்திரனின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்ற ஹிதேந்திரனின் படத்திறப்பு விழாவில் ஏராளமான முக்கிய பிரமுகர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு, ஹிதேந்திரனின் மூளை செயலிழந்த நிலையில், அவரது உடல் உறுப்புகளை பெற்றோர் தானம் செய்தனர்.

இதய தானம் பெற்ற சிறுமி அபிராமியின் தந்தை சேகர், தாய் மஞ்சுளா இருவரும் ஹிதேந்திரனின் படத்துக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அவர்கள் கூறுகையில், பெங்களூருவில் ஹிதேந்திரன் பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து தங்களால் முடிந்த உதவிகளைச் செய்யவிருப்பதாகக் தெரிவித்தனர்.

ஹிதேந்திரன் உடலில் இருந்து இதயத்தை எடுத்ததும் அபிராமிக்கு பொருத்துவதற்காக தேனாம்பேட்டையில் இருந்து முகப்பேர் பகுதிக்கு இதயத்தை 10 நிமிடத்தில் கொண்டு சேர்க்க உதவிய காவல்துறை உதவி ஆணையர் மனோகரன், காவலர் மோகன் ஆகியோரும் படத்திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதில் பங்கேற்ற அனைவரும் ஹெல்மட் அணியவும், உடல் உறுப்புகளை தானம் செய்யவும் உறுதி எடுத்துக் கொண்டனர். மேலும் மிதமான வேகத்தில் வாகனங்களை ஓட்டுவதற்கும் அவர்கள் உறுதிபூண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்