வேகமாக பரவிவரும் மர்ம வைரஸ்: பாதிப்புகள் அதிகம் என எச்சரிக்கை!

சனி, 18 ஜனவரி 2020 (15:12 IST)
அறிவியலில் முன்பு அறியப்படாத புதிரான வைரஸ் ஒன்று சீனாவில் வேகமாக பரவி வருகிறது.
 
உறுதியாக இதுவரை 41 பேர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த எண்ணிக்கை 1,700 வரை இருக்கலாம் என்று பிரிட்டன் நிபுணர்கள் கணக்கிடுகிறார்கள்.
 
கடந்த டிசம்பர் மாதம் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் தீவிர நுரையீரல் நோயை உருவாக்கி வருகிறது. இதுவரை இதனால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
 
வுஹான் நகரில் இந்த வைரஸ் பரவியதை தொடர்ந்து, தாய்லாந்தில் இருவரும், ஜப்பானில் ஒருவருக்கும் இந்த வைரஸ் பரவி இருப்பது தெரிய வந்தது. இது கவலை அளிக்கும் விதமாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இது ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு பரவுவது போல தெரியவில்லை. வுஹானில் உள்ள அசைவ உணவுகளின் சந்தையில் இருக்கும் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து பரவி இருப்பதாக சீன அதிகாரிகள் கூறுகிறார்கள்.
 
கொரோனா வைரஸ்கள்  என்பது பெரிய வைரஸ் குடும்பம். இதில் மனிதர்களை பாதிக்கக்கூடியவையாக  ஆறு வகை வைரஸ் இருந்தன, தற்போது இந்த மர்ம வைரஸ் ஏழாவது வகையாக இருக்கக்கூடும்.  
 
சீனா மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவை இந்த தொற்று, கொரோனா வைரஸ் என முடிவுக்கு வந்துள்ளன. இந்த புது வைரஸின் மரபணு குறிமுறை கிட்டத்தட்ட சார்ஸ் வைரஸுக்கு நெருக்கமானது போன்று இருக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். சார்ஸ் என்பதே மனிதர்களை பாதிக்கும் கொரோனா வைரஸின் ஒரு வகை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்