பஞ்சாமிர்தம்

புராணத்தை, நிகழ்காலத்துடன் இணைத்து இயக்குனர் ராஜு ஈஸ்வரன் பிழிந்திருக்கும் நகைச்சுவை சாறு, பஞ்சாமிர்தம்.

webdunia photoWD
ராமாயண காலத்திலிருந்து தொடங்குகிறது படம். மா‌ரிசனுக்கும், இடும்பனுக்கும் குருவின் மகள் மந்தாகினியின் மீது மோகம். மந்தாகினி யாருக்கு என்ற சண்டையில் இடும்பனை தண்டையாக்கி காலில் அணிந்து கொள்கிறான் மா‌ரிசன். பிறகு மாய மானாக ராமனுக்கு போக்கு காட்டி அவனது அம்பால் வீழ்த்தப்பட்டு பூமியில் பாறையாக மா‌ரிசன் மாறுவதுடன் புராண கதை நிறைவடைகிறது.

நிகழ்கால கதை ஊட்டியில் நடக்கிறது. பணக்காரரான நாச‌ரின் உதவியாளர் சரண்யா மோகன். அவரது கெடுபிடி பிடிக்காமல் நாசரை சுற்றியுள்ளவர்கள் மலையிலிருந்து சரண்யா மோகனை கிழே தள்ளிவிடுகிறார்கள். சரண்யா மோகன் விழும் இடம் மா‌ரிசன் பாறை. சரண்யாவால் சாபவிமோசனம் பெறும் மா‌ரிசன், அவருக்கு உதவ முன்வருகிறார்.

இப்போது கதையில் எதிர்பாராத ட்டுவிஸ்ட். சரண்யா மீண்டும் நாசரை தேடி வரும்போது அங்கு இருப்பது நாசரைப் போல தோற்றம் கொண்ட வேறொரு நாசர். அவருக்கு உதவி செய்வது புராண காலத்தில் மா‌ரிசனால் தோற்கடிக்கப்பட்ட இடும்பன். இந்த காமெடி கலாட்டாவுக்கு நடுவில் நாச‌ரின் பேத்திதான் சரண்யா மோகன் என்ற கிளைக் கதையும், சரண்யா மோகன், அரவிந்தன் காதலும் உண்டு.

புராணத்தையும், நிகழ்காலத்தையும் இணைத்ததில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். சரண்யா மோகனின் துருதுரு நடிப்பும், நாச‌ரின் லொள்ளும் படத்தின் ரசிக்க வைக்கும் விஷயங்கள். மா‌ரிசனாக ஜெயராமின் நடிப்பும், இடும்பனாக வரும் இயக்குனர் ராஜு ஈஸ்வரனுடன் அவ‌ர் மோதும் காட்சிகளும் குழந்தைகளை கவரும்.

கில்லராக வயிறு வலிக்க சி‌ரிக்க வைக்கிறார் கருணாஸ். எம்.எஸ். பாஸ்கர், மயில்சாமி, இளவரசு கூட்டணி சேரும் போதெல்லாம் சி‌ரிப்பலை வெடிக்கிறது. சுந்தர் சி பாபுவின் பாடல்கள் சுமார் ரகம். குழந்தைகளை மனதில் வைத்து கிராபிக்ஸை பயன்படுத்தியிருப்பதால் தரம் குறித்து இயக்குனர் அதிகம் அலட்டிக் கொள்ளாதது தெ‌ரிகிறது.

பஞ்சாமிர்தம் - லா‌ஜிக்கை மறந்த காமெடி மே‌ஜிக்.