துரை - விமர்சனம்!

ஏ. வெங்கடேஷ், அர்ஜுன் இணையும் படம். எதிர்பார்த்தது போல கமர்சியல் கொத்துப் பரோட்டா.

மெஸ் அம்பி விவேக்கிடம் வேலை பார்க்கிறார் அர்ஜுன். தான் யார், தனது பெயர் என்ன என்பதே அவருக்கு தெரியாது. அதனை தெரிந்து கொள்ள போலீஸின் உதவியை நாடுகிறார் அர்ஷின்.

இடையே துரை உயிரோடுதாண்டா இருக்கிறான் என்று வில்லன் ஆட்கள் உருட்டு கட்டையோடு அர்ஜுனை துறத்துகிறார்கள்.தமிழ் சினிமா வழமைப்படி மண்டையில் வாங்கியதும் அர்ஷினுக்கு பழைய நினைவு திரும்புகிறது.
webdunia photoWD

முன் கதையில் கட்சி தலைவர் கே. விஸ்வநாத்தின் ‌விசுவாச தொண்டர் அர்ஜுன். அந்த விசுவாசத்துக்கு கை மாறாக, எனக்குப் பிறகு கட்சிக்கு நீ தான் தலைவர் என்று கூறி கண்மூடுகிறார் விஸ்வநாத்.

கடைசியாக அவரைப் பார்த்தது அர்ஷின் என்பதால் அவர்தான் விஸ்வநாத்தை கொலை செய்திருக்க வேண்டும் என்று கூறி அர்ஜுனை என் கவுண்டரில் போட்டுத் தள்ள துடிக்கிறது போலீஸ். அவர்களின் தோட்டாக்களுக்கு தப்பிக்கும் அர்ஜுனுக்கு மண்டையில் அடிபட்டு நினைவுகள் மறந்து விடுகிறது.

பழைய நினைவுகள் திரும்ப கிடைத்த பிறகு தலைவரையும், தனது மனைவி (கஜாலா) மற்றும் குழந்தையை கொன்றவனை அர்ஜுன் பழி வாங்குகிறார்.

அடிதடிக்கென்றே எழுதப்பட்ட கதை என்பதால் புகுந்து விளையாடியிருக்கிறார் அர்ஜுன். தனது சிக்ஸ் பேக் தேகத்தை காட்ட அவ்வப்போது சட்டையை கழற்றுகிறார். ஆனால் லாஜிக்கை மட்டும் நிரந்தரமாக கழற்றி வைத்திருக்கிறார்கள். மண்டையில் அடிபட்டதும் நினைவுகள் மறந்து போவதும், மீண்டும் அடிபட்டதும் நினைவுகள் ரிட்டர்ன் ஆவதும் சினிமா.. சினிமா...

முதல் பாதியில் அர்ஜுனுடன் சேர்ந்து சிரிக்க வைக்க முயல்கிறார் விவேக். கஷ்டப்பட்டால் கொஞ்சமாக சிரிக்கலாம். ஹீரோயின் கீரத் கறிவேப்பிலை. வெளிநாடுகளில் டுயட் பாட உதவியிருக்கிறார். விஸ்வநாத்தின் மகன்தான் அவரை கொலை செய்தது என்பது எதிர்பாராத ட்விஸ்ட்.

அடுத்த சிஎம் என்ற அளவுக்கு பில்டப்போடு இருக்கும் அர்ஜுனை யாருக்கும் அடையாளம் தெரியாமல் இருப்பது, எதிர்கட்சி தலைவர் அர்ஜுனை போட்டுத்தள்ளு, அவர் போனை டேப் பண்ணு என்று போலீசை ஆட்டுவிப்பது எல்லாம் வெண்திரையில் மட்டுமே நடக்கும்.

பாடல்கள் பிலோ ஆவரேஜ். பின்னணி இசையும் செவிக்கு சுகமாக இல்லை. வாத்திய கருவிகளை எப்போது குறைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

மசாலா பிரியர்களுக்கு (மட்டும்) துரை நல்ல இரை.