சில நேரங்களில்!

செவ்வாய், 4 மார்ச் 2008 (17:39 IST)
webdunia photoWD
வின்சென்ட் அசோகன், நவ்யா நாயர் கணவன், மனைவி. தனது மனைவிக்கும் தனது நண்பன் பாடகர் வினித்துக்கும் தொடர்பு இருக்குமோ என்று வின்சென்ட் அசோகனுக்கு சந்தேகம். இந்நிலையில் நவ்யா நாயர் கொல்லப்படுகிறார். அவரை கொன்றது யார்?

அறுபதுகளில் நடக்கும் இந்தக் கொலைக்கான கேள்வி 2005ல் நவ்யா, வின்சென்ட் அசோகனின் மறுபிறவியிலும் தொடர்கிறது. கேள்விக்கான பதில் தெரியவரும் போது எதிர்பாராத அதிர்ச்சி!

ரகுவரன் ஹிப்னாடிஸம் மூலம் நவ்யா நாயர் மற்றும் வின்சென்ட் அசோகனின் முன் ஜென்மத்தை ஜஸ்ட் லைக் தட் அறிந்து கொள்வதெல்லாம் காதுல பூ. தந்தை அசோகனைப் போலவே வளையாத உடம்பும், குழையாத குரலுமாக வின்சென்ட் அசோகன். மனைவியை சந்தேகப்படும் காட்சியிலு'ம், நண்பனுடன் சண்டையிடும் காட்சியிலு'ம் ஜொலிக்கிறார். புதுசாக தமிழ் படிப்பவர் போல் அட்சர சுத்தமாக பேசும் தமிழ் உச்சரிப்பு அலுப்பு.

கனவு கண்டு திடுக்கிடுவதும், சோகத்தில் கண்ணீர் விடுவதுமாக வரும் நிகழ்கால நவ்யா நாயரை விட அந்த பெரிய கொண்டை முன் ஜென்ம நவ்யா அழகு. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும், பிளாஷ்பேக்கில்தான் பிரகாசிக்கிறது. அறுபதுகளில் வரும் இரு பாடல்களும் காதுக்கு இனிமை. பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.

ரகுவரனின் கதாபாத்திரம் எதிர்பாராத அதிர்ச்சி என்றால் ரமேஷ் கண்ணா சகிக்க முடியாத அயர்ச்சி. ஓட்டு கெட்டப்பில் வரும் வினித்தின் நடிப்பு கோல்ட்!

ராஜவேலின் கேமரா படத்திற்கு பலம். நிகழ்காலத்தையும், முன் ஜென்மத்தையும் உறுத்தாத வகையில் வேறுபடுத்தி காட்டியிருப்பதற்கு சபாஷ். படத்தின் இன்னொரு பலம் எடிட்டிங். (இரண்டு மணி நேரமே படம் ஓடுகிறது).

திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யப் படுத்தியிருந்தால் ஜெயராஜின் இந்த க்ரைம் த்ரில்லரை இன்னும் ரசித்திருக்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்