ராமேஸ்வரம் சர்ச்சைக்குரிய படமல்ல! - இயக்குனர் எஸ்.செல்வம்

Webdunia
ஜீவா-பாவனா நடிப்பில் ஐ.டி.ஏ பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "ராமேஸ்வரம்". இது இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதியாக வரும் மக்கள் வாழ்க்கையின் வலியைப் பதிவு செய்கிற படமாக உருவாகிறது. படம் பற்றி பல்வேறு கேள்விகள் எழவே இயக்குநர் எஸ்.செல்வத்தை சந்தித்தோம்.

"ராமேஸ்வரம்" கதைக் கரு என்ன?

இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு அகதியாக வரும் நாயகன் ஜீவா. அவரது பாத்திரத்தின் பெயர் சிவானந்தராசா: சுருக்கமாக ஜீவன். ஜீவனுக்கு சொந்த ஊரைப் பிரிந்த சோகம் நெஞ்சில் ஆழமாக ஊறைந்திருக்கிறது. தன் தாத்தாவிடம் இதுபற்றி கேட்பான். ஏன் வந்துட்டோம். பயந்து வந்துடடோமா... கோழையாய்ட்டோமான்னு. இப்படி அவன் மனதில் வலிகளின் அழுத்தம். அவனுக்கு புன்னகை மறந்து போகிறது. பூக்கள் மறந்து போகிறது. வேகமும் வேதனையும் அவனுக்குள் குடிகொண்டிருக்க ஓரஅசாதரண இளைஞனாக இருக்கிறான். இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் பாவனா. அனைவராலும் அன்பு செய்யப்படுகிற வசந்தியாக வருகிறார். அன்பு, மகிழ்ச்சி, நிம்மதி, உற்சாகம் இவற்றின் கலவை தான் வசந்தி. வசந்தியின் கனிவான கண்கள் ஜீவனை நோக்க கனிவு அன்பாகி காதலாகிக் கசிகிறது. ஆரம்பத்தில் மறுத்து ஒதுக்கி விலகிப் போகும் ஜீவனின் பாறை மனத்தில் விழுந்து முளைக்கும் விதையாக காதல் மெல்ல நுழைகிறது. வேர்விட்டு பாறையிலேயே விரிசல் விழ வைத்து நுழைந்துவிடுகிறது. முடிவு என்ன என்பதுதான் ஒரு கவித்துவமான க்ளைமாக்ஸ்.

இதில் இலங்கைத் தமிழர் வாழ்க்கை என்பதால் சர்ச்சைகள் வராதா?

இதில் அரசியல் எதுவுமில்லை. எந்தக் கொள்கையையும் உயர்த்திப் பிடிக்கவுமில்லை. தாழ்த்திப் பேசவும் இல்லை. யாரையும் குறை கூறவோ குற்றம் சாட்டவோ செய்யவில்லை. எனவே பிரச்சினைக்கோ சர்ச்சைக்கோ இடமில்லை. அகதி ஒருவனின் மனவலியை அடி மன அழுத்தத்தின் வெப்பத்தைப் பதிவு செய்திருக்கிறோம். இதில் பிரதானமாக இருப்பது மன உணர்வு தானே தவிர அரசியல் அல்ல. அகதி என்றால் அவனுக்கு எதுவுமில்லை. எந்த உணர்ச்சியும் இல்லை. எந்த உரிமையுமில்லை என்ற பார்வை உள்ளது. உரிமை கிடைக்காதவனுக்குக் கூட உணர்வு இருக்கிறதல்லவா? அப்படி ஓர் அகதியின் உணர்வைத் தான் "ராமேஸ்வர"த்தில் பதிவு செய்து இருக்கிறோம். எனவே தேவையில்லாத யூகங்கள். ஹேஷ்யங்கள் சர்ச்சைகள் என்பதற்கு இந்தப் படத்தில் இடமே இல்லை.

அகதி-உணர்வு என்று சொல்லிவிட்டு ஒரு காதல் கதையைத் தானே சொல்ல வருகிறீர்கள்..?

வெறும் உணர்வுகள் என்றால் உட்கார்ந்து படத்தைப் பார்க்க வேண்டும் அல்லவா. அதற்காகத் தான் அதன் பின்னணியில் ஒரு காதல் கதையைச் சொல்லியிருக்கிறோம். காலத்தைக் கடந்து நிற்கும் படங்கள் உலகப் புகழ் பெற்ற படங்கள் எல்லாவற்றிலும் காதலை மையப்படுத்தியே கதை அமைந்து இருக்கும். காதல் பின்புலத்தில் வைக்கப்பட்டு மனித வாழ்வினை பதிவு செய்யும் படங்கள் தான் பெரிய வெற்றி பெற்றுள்ளன. எனவே காதலை தவிர்க்க முடியாது. "ராமேஸ்வரம்" ஒரு காதல் கதை தான்.

ஒரு காதல் கதையை எடுகக் அகதிகள் சம்பந்தப்பட்டவை பின்புலமாக்கியுள்ளீர்கள் எனலாமா?

இப்படி சிறிய வட்டத்துக்குள் இதை அடக்கிவிட முடியாது. வெறும் பின்புலத்துக்காக-மாறுபட்ட கதைத் தளம் வேண்டும் என்பதற்காக இலங்கை அகதியின் வாழ்க்கை எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவர்களின் வலிகளை வாழ்க்கையைப் பதிவு செய்ய- அதை வெளிப்படுத்த காதல் கதையைப் பயன்படுத்தியிருக்கிறோம் என்றும் சொல்லலாம்.

இலங்கைத் தமிழ் பல படங்களில் கேலிக்குரியதாகி இருக்கிறது. இதில் எப்படி?

முடிந்தவரை இலங்கைத் தமிழை இயல்பாக வரும்படி செய்திருக்கிறோம். அனைவருக்கும் புரியும் படி இருக்கும். இதற்காக பல பேரைச் சந்தித்து அந்த மொழி பேச்சு வழக்கு பற்றி விரிவாக பேசி தயார் செய்ய வேண்டியிருந்தது.

இந்தப் படப்பிடிப்பை "ராமேஸ்வரம்" கடற்கரையில் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாமே?

ராமேஸ்வரம் நாட்டின் எல்லைப் பகுதியாக இருப்பதால் அங்கு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் கடுமையாக இருக்கும். நாங்கள் ஒரு பகுதியில் செட் போட்டுப் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டு இருந்தோம். அனுமதிக்க மறுத்துவிட்டனர். காரணம் "ராமேஸ்வரம்" படம் என்பதால் அல்ல. எந்தப் படத்துக்கும் அந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த அமைதி கிடைக்காது. அந்த அளவுக்குப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்ட பகுதி. அதுமட்டுமல்ல அங்கு அனுதி பெறுவது என்றால் பத்துக்கும் மேற்பட்ட துறையினர் அனுமதி தர வேண்டும். நம்மால் அவ்வளவு தூரம் அலைய முடியுமா? வேறு ஓர் இடம் மண்டபம் அருகே கிடைத்தது. அதில் செட் போட்டு மேட்ச செய்து விட்டோம்.

இதில் ஜீவா எப்படி நடித்து இருக்கிறார்?

இந்தப் படத்துக்குப் பிறகு ஜீவா உலகத் தமிழர் மத்தியில் மிகவும் புகழ்பெற்றுவிடுவார். ஜீவா மட்டுமல்ல பாவனா, மணிவண்ணன், லால், போஸ் வெங்கட், டான்ஸ் மாஸ்டர் சாந்தி, சம்பத் போன்றோரும் சிறப்பாக நடித்துள்ளனர். இது மட்டுமல்ல ஆங்கிலேயர் காலத்து துறைமுகம் "கோல்டன் ராக்" ராமர் பாதம், கோதண்ட ராமர் கோயில், தனுஷ்கோடி, தாலங்காடு கடற்கரை போன்ற இடங்களும் கூட ஒரு பாத்திரத்தைப் போலவே படத்தில் இடம் பெறுகின்றன. வாழ்ந்திருகின்றன. அவ்வளவு இடங்களையும் கண்முன் கொண்டு நிறுத்தியிருக்கிறாரகேமராமேன் ஏகாம்பரம். இசையமைப்பாளர் நரு காதுகள் வழியே கேட்பவர்களை இலங்கைக்கு அழைத்துச் சென்றுவிடுவார். அந்த அளவுக்கு இசையில் மண்வாசம் வீசுகிறது.

சில காட்சிகள் எடுக்க வேண்டி உள்ளன. அதற்காக கம்போடியா செல்ல இருக்கிறோம் என்றார் இயக்குநர் செல்வம்.

வெப்துனியாவைப் படிக்கவும்