சஞ்சய்ராமின் அடுத்த படம் “இயக்கம்”

தூத்துக்குடி படத்தின் கதாசிரியர், ஆடுபுலி ஆட்டம் படத்தின் இயக்குநருமான சஞ்சய்ராமின் அடுத்த படம் "இயக்கம்".

தாதா கும்பலைப் பற்றி குறிப்பாக தென்மாவட்ட ரவுடிகளின் வாழ்க்கையைப் பற்றி மிகத் துல்லியமாக படமெடுக்கும் சஞ்சய்ராம் இயக்கத்தில் அதே ரவுடி மேட்டரைத்தான் எடுக்கப்போகிறாரா? என சந்தேகம் வந்து அவரிடமே கேட்டோம்.

"இயக்கம் அந்தக் கதையல்ல. ஆசிரமம் என்ற பெயரில் அனாதைக் காப்பகம் என்ற பெயரில், அனாதைக் குழந்தைகளை தத்தெடுத்து அவர்களை எப்படி மிஸ்யூஸபண்ணுகிறார்கள் என்பதை ரொம்ப டீட்டெய்லாக சொல்லப் போகிறேன்.

இப்படி பாதிக்கப்பட்ட ஹீரோ, இதேபோல் பாதிக்கப்பட்ட பல இளைஞர்களை ஒன்றுசேர்த்து ஒரு இயக்கமாக போராடுகிறான். இதுதான் கதை."

உங்கள் படங்களில் கேரக்டர்களுக்கு நட்சத்திரங்களை மிக தத்ரூபமாக தேடிப் பிடிக்கிறீர்களே?

"உண்மைதான். வழக்கமான ஆட்களைப் போட்டால் அது மாமூலான சினிமாவாக இருக்கும். அதனால்தான் புதிய முகங்களை, அதிலும் வித்தியாசமான முகங்களைத் தேடிப்பிடித்து பயன்படுத்துகிறேன்.

இந்தப் படத்திலும்கூட தேவானந்த் என்கிற இளைஞரை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறேன். எனது படத்தில் வரும் கேரக்டர்களின் பெயர்கள்கூட மிக வித்தியாசமாக இருக்கும்.

இயக்கம் படத்தில் ஹீரோவின் பெயர் "பொய்சொல்லா மெய்யான்" என வைத்திருக்கிறேன். கதாநாயகியாக ஸ்ருதிராஜ் நடிக்கிறார்.

உங்களுக்கும் ரவுடிக் கும்பலுக்கும் நட்பு ரீதியாக ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இவ்வளவு துல்லியமாக அவர்களைப் பற்றிய கதையைச் சொல்கிறீர்களே?

(இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மழுப்பி சிரிக்கிறார் சஞ்சய்ராம்.)

இதுவும் தென்மாவட்டத்தை பின்புலமாகக் கொண்ட கதையா?

"இல்லை. சென்னை, திருவள்ளூர் மாவட்டம் தான் கதைக்களம். ராமேஸ்வரத்திலும் சில காட்சிகளை எடுக்கிறோம்."

இது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான கதை என்றுகூட ஒரு தகவல் வருகிறதே...?

"இந்தப் படத்தில் தமிழ் இனத்தலைவன் திலீபனாக தென்னவன் நடிக்கிறார். அதனால் இப்படியொரு செய்தி உலா வந்திருக்கலாம். இதுபற்றி நான் நேரடியாக சொல்ல முடியாது. ஆனால் சுதந்திர மண்ணில் பறிக்கப்பட்ட சுதந்திரத்தை மீட்கப் போராடும் கதைக் களத்தைக் கொண்டது இந்த இயக்கம்" என்று முடித்துக்கொண்டார் சஞ்சய்ராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்