திரையில் க‌ரீனாவின் காதல் கதை

புதன், 22 ஜூலை 2009 (16:49 IST)
திரைப்படங்களை விட சுவாரஸியமாக, திடுக்கிடும் திருப்பங்களுடன் இருக்கும் சில உண்மைச் சம்பவங்கள். திரையுலக கலைஞர்களின் வாழ்வில் அப்படியொரு சம்பவம் நடந்தால் அதன் மதிப்பே தனி.

க‌ரீனா கபூர், ஷாகித் கபூர் இருவரும் காதலித்த போது பத்தி‌ரிகைகளுக்கு ப்ரேக்கிங் நியூசுக்கு பஞ்சமே இருந்ததில்லை. இருவரும் பார்ட்டி ஒன்றில் வாய்க்குள் வாய் திணித்து அகழ் 'வாய்' ராய்ச்சி செய்ததை பத்தி‌ரிகையில் பார்க்க நேர்ந்த போது, இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றுதான் ஒவ்வொரு இந்திய மனமும் நினைத்தது. ஆனால், க‌ரீனாவின் இதயம் கொஞ்சம் வெஸ்டர்ன் டைப்.

ஷாகித் கபூருக்கு தண்ணி தெ‌ளித்து சயிஃப் அலிகானை சேர்த்துக் கொண்டார். ஷாகித் கபூரை க‌ரீனா கை கழுவ என்ன காரணம்? ஏற்கனவே திருமணமான சயிஃபை ஏன் தேர்ந்தெடுத்தார்? பதில் கிடைக்காத இந்த கேள்விகள் கதிமோட்சம் வேண்டி இன்னும் பாலிவுட்டை சுற்றிக் கொண்டிருக்கின்றன.

சூழல் இப்படியிருக்க, க‌ரீனாவின் இந்த விடுத்தல் தொடுத்தல் காதல் கதையை தி சீக்ரெட் லைஃப் ஆஃப் க‌ரீனா என்ற பெய‌ரில் படமாக்க முன்வந்துள்ளது ஸ்பெக்ட்ரா மல்டிமீடியா பிலிம்ஸ். படத்தில் க‌ரீனா வேடத்தில் நடிக்க ஸ்ரத்தா ஷர்மாவிடம் கேட்டிருக்கிறார்கள்.

முக்கியமான நட்சத்திரங்களின் உண்மைக் கதை என்பதால் கால்ஷீட் என்று வாய் திறக்கும் முன் காத தூரம் ஓடுகிறார்கள் ஒவ்வொருவரும். ஸ்ரத்தாவும் இன்னும் ஸ்திரமான ஒரு பதிலை கூறவில்லை. பேசாமல் சம்பந்தப்பட்ட ஷாகித், க‌ரீனா, சயிஃப் ஆகியோரையே நடிக்க வைத்தால் என்ன? கதைக்கு ஒ‌ரி‌ஜினாலிட்டி கூடியது மாதி‌ரியும் இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்