ஜேம்ஸ் பாண்ட் 007 பிறந்த கதை!

Webdunia

ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2007 (16:56 IST)
ஹாலிவுட்டின் மிக பிரமாண்ட தயாரிப்புகளில் முக்கிய இடம் பெற்றுவரும் ஜேம்ஸ்பாண்ட் 007 கதைகளை எழுதிய இயன் ஃபிளமிங், அது எப்படி பிறந்தது என்பதை தனது நண்பர் ஒருவரிடம் கூறிய தகவல் தற்பொழுது வெளிவந்துள்ளது!

எழுத்தாளர் இயன் ஃபிளமிங், பங்குச் சந்தை தரகராக பணியாற்றியவர். அதன்பிறகு தி டைம்ஸ் இதழில் செய்தியாளராக பணியாற்றியவர். அப்பொழுது, அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஏற்பட்ட "கவலையில்" இருந்த தனது மனதை திசை திருப்ப ஒரு கதையை தனது தட்டச்சு இயந்திரத்தில் உருவாக்கத் தொடங்கினார்.

ஒரு மாதத்தில் அந்தக் கதை பிறந்தது. கதையின் பெயர் காசினோ ராயல். இதன் கதாநாயகன்தான் ரகசிய உளவாளி ஜேம்ஸ் பாண்ட் 007. இது 1954 ஆம் ஆண்டு நடந்தது.

இவர் எழுதிய கதைக்கு அடிப்படையாக அமைந்தது, 2வது உலகப் போரின் போது அவர் கடற்படையில் உளவுப் பிரிவில் பணியாற்றியதே ஆகும். அந்த அனுபவத்தைக் கொண்டு முதல் கதையை வடித்த ஃபிளமிங், தனது நண்பரிடம், "நான் ஒரு உளவுக் கதையை எழுதப் போகிறேன். அது உளவுக் கதைகளுக்கே முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

அதன்பிறகு ஜேம்ஸ் பாண்டை மையப்படுத்தி 14 கதைகளை எழுதிய ஃபிளமிங், 1964 ஆம் ஆண்டு காலமானார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இயன் ஃபிளமிங் எழுதிய புத்தகங்களும், அதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களும் ஒரு கண்காட்சியாக வைக்கப்படவுள்ளது. அதில், அவரைக் கவர்ந்த பொம்மைகளும், ஆடைகளும் கூட இடம்பெறுமாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்