பத்மபூஷண் ஆளுமைமிக்க அங்கீகாரம் - வைரமுத்து

திங்கள், 27 ஜனவரி 2014 (09:04 IST)
FILE
கவிஞர் வைரமுத்துக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து அறிக்கை ஒன்றை வைரமுத்து வெளியிட்டுள்ளார்.

கலை இலக்கியப் பணிகளுக்காக பத்மபூஷண் விருது எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தேசிய அளவில் ஆளுமை மிக்க ஓர் அங்கீகாரமாகும். இந்த விருது பெறுவதன் மூலம் அது தருகிற மகிழ்ச்சியை நான் மறைக்க விரும்பவில்லை. மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.

நீண்ட பயணத்தில் நெல்லிச்சாறு போல இனி ஆற்றவிருக்கும் பணிகளுக்கு இது ஊட்டமும் உற்சாகமும் தரும் என்று நம்புகிறேன்.

இது இட்டுக் கொள்வதற்கான பட்டம் அல்ல. பெற்றுக்கொள்வதற்கான விருது என்று புரிந்து கொள்கிறேன். விருது என்பது பயணத்தின் முடிவல்ல. பயணப்பாதையில் இளைப்பாறிக் கொள்ளும் ஒரு பாலைவனச் சோலை.

சற்றே இளைப்பாறிவிட்டு இன்னும் விரைந்து ஓடுவேன். கலை இலக்கியத்தின் வழியே மனிதகுல மேம்பாடு என்ற குறிக்கோளைத் தொடுவேன். இந்த ஆண்டு பத்ம விருது பெற்ற பெருமக்களையெல்லாம் வாழ்த்துகிறேன். என்னை இந்த விருதுக்கு முன்னெடுத்துச் சென்ற தமிழ்ச் சமுதாயத்தை வணங்கி நன்றி சொல்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்