நடிகர் தற்கொலை - குஷ்பு அதிர்ச்சி

புதன், 8 ஜனவரி 2014 (12:12 IST)
FILE
உதய் கிரண் தற்கொலை செய்து கொண்டது நடிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குஷ்பு, ப்ரியாமணி உள்ளிட்டவர்கள் தங்களின் அதிர்ச்சியை தெரிவித்துள்ளனர்.

தமிழில் பொய் படத்தில் அறிமுகமானவர் உதய் கிரண். தொடர்ந்து பெண் சிங்கம், வம்பு சண்டை போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கில் 19 படங்களில் நடித்துள்ளார். ஆந்திரா அறிந்த இளம் நடிகர்களில் உதய் கிரணும் ஒருவர்.

இந்நிலையில் அவர் கடைசியாக நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த தோல்வி உதய் கிரணை கடுமையாக பாதித்திருக்கிறது. தவிர அவருக்கு பண நெருக்கடி இருந்ததாகவும் போலீசார் தpவித்துள்ளனர். குடும்பத்திலும் அவருக்கு இணக்கமான மனநிலை இருக்கவில்லை என உதய் கிரணுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

FILE
தற்கொலை செய்து கொள்வதற்கு முந்தைய நாள்களில் உதய் கிரண் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதுவே அவரது தற்கொலைக்கு காரணமாக அமைந்திருக்கலாம் எனவும் போலீஸ் கமிஷனர் கருத்து தெரிவித்துள்ளார். பிரேதப் பரிசோதனையும் அவர் தற்கொலை செய்து கொண்டதை உறுதிப்படுத்தியுள்ளது.

முப்பத்தி மூன்றே வயதான உதய் கிரணின் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து திரையுலகம் மீளவில்லை. உதய் கிரண் இளம் நடிகர், திறமையானவர். அவரின் தற்கொலை செய்தி கேட்டு அதிர்ச்சியானேன் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

பொய் படத்தில் உதய் கிரணுடன் நடித்தவர் விமலா ராமன். அவரின் முதல் திரையுலக நாயகன். அவர் கூறும் போது, உதய் கிரண் பழக இனிமையானவர், அவரை இழந்தது வருத்தமளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

இவர்கள் தவிர பிரகாஷ்ராஜ் ப்ரியாமணி போன்றோர்களும் தங்களின் அதிர்ச்சியையும், இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்