தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துவதற்கு இந்தி நடிகர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள். ஐஃபா விழாவை அமிதாப்பச்சன் புறக்கணித்த போது தாங்கிப் பிடித்தவர்கள் சல்மான்கானும், விவேக் ஓபராயும். தமிழர்களின் கண்டனத்தை மீறி இவர்கள் இலங்கையில் ஐஃபா விழாவை முன்னின்று நடத்தினர்.
பழங்கதையை மறப்போம். புதிதாக படம் எடுக்க இலங்கை செல்கிறார் ஜான் ஆபிரஹாம். ஈழப் போராளிகளுக்கும் சிங்களப் பேரினவாத அரசின் ராணுவத்துக்கும் இடையில் நடந்த போரை இவர் திரைப்படமாக்கப் போகிறாராம். இந்தப் படத்தில் அமைதிப்படை இலங்கையில் இருந்த காலகட்டமும் பதிவு செய்யப்பட உள்ளதாம். ஜாஃப்னா என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை தயாரித்து இந்திய புலனாய்வு அதிகாரியாக நடிக்கயிருக்கிறார் ஜான் ஆபிரஹாம்.
இந்தப் படத்தை யாழ்ப்பாணத்திலும், போர் நடந்த இடங்களிலும் எடுக்கயிருக்கின்றனர். இதற்கு ராஜபக்சே அரசு முழு ஒத்துழைப்பு தந்துள்ளது. இதனால் படம் ஈழப் போராளிகளுக்கு எதிரானதாக இருக்கும் என தமிழுணர்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் ஈழப் பிரச்சனையில் இலங்கை ராணுவத்தைவிட அதிக சேதத்தை ஏற்படுத்தியது இந்தியாவின் அமைதிப்படை. தேசப்பற்று என்ற அழுக்கு போர்வைக்குள் படமெடுப்பவர்கள் நிச்சயம் அமைதிப்படையின் அட்டூழியத்தை சொல்லப் போவதில்லை. அத்துடன் அவர்களை தேவதூதர்களைப் போல்தான் காட்டப் போகிறார்கள்.
இந்த தாக்குதலை தமிழர்களாகிய நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?