மீனவ ஏரியாவில் விஜய், ஜீவா

வெள்ளி, 5 ஜூன் 2009 (18:18 IST)
விஜய்யின் ஐம்பதாவது படத்தை யார் இயக்குவது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. தயாரிப்பாளர் சங்கிலி முருகன் என்பதும், இயக்குனர் எஸ்.பி. ராஜ்குமாரின் கதை என்பதும் தெரிந்த விஷயங்கள்.

ஐம்பதாவது படத்தில் மீனவனாக நடிக்கிறாராம் விஜய். ஐம்பது படங்கள் நடித்திருந்தும் மீனவனாக விஜய் நடிப்பது இதுவே முதல் முறை.

சுவாரஸியம் என்னவென்றால், இதே மீனவன் வேடத்தில் நடிக்கிறார் ஜீவா. இவர் முதல் முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கும் படம் சிங்கம்புலி. ஹீரோ, வில்லன் இரண்டுமே ஜீவாதான் என்கின்றன செய்திகள். இதில் ஒரு வேடம் மீனவனாம்.

இவர்கள் இருவருக்கு‌ம் முன்பே கடற்கரையோரம் ஒதுங்கியவர் ஷாம். இவரது அந்தோணி யார் படத்தின் கதையே மீனவர்களை பற்றியதுதான். என்ன விவகாரமோ இன்னும் கரை சேராமலே இருக்கிறது படம்.

ஹீரோக்களின் திடீர் மீனவ மோகத்துக்கான காரணம் தெரியவில்லை. எம்.ஜி.ஆர். மீனவனாக நடித்த படகோட்டி, மீனவ நண்பன் வெற்றி பெற்றதும் ஒரு காரணமாக இருக்கலாம். விஜய்க்கெல்லாம் ரோல் மாடல் வாத்தியார்தானே!

வெப்துனியாவைப் படிக்கவும்