உடையும் இசைக் கூட்டணிகள்!

புதன், 7 ஜனவரி 2009 (21:26 IST)
இது பிரிவுகளின் காலம். திரையில் பிரபலமாகவும், ஆரோக்கியமாகவும் இருந்த பல கூட்டணிகள் உடைந்து வருகின்றன.

தனது முதல் படத்திலிருந்து யுவனையும், கேமராமேன் அரவிந்த கிருஷ்ணாவையும் பயன்படுத்தி வந்தார் செல்வராகவன். மூவரும் இணைந்து தயாரிப்பு நிறுவனம் கூட தொடங்கினர்.

இந்நிலையில் அரவிந்த் கிருஷ்ணா, யுவன் இருவரையும் தனது படத்தில் பயன்படுத்துவதை நிறுத்திக் கொண்டார் செல்வராகவன். பல மறக்க முடியாத பாடல்களை தந்த யுவன்-செல்வா கூட்டணியின் முறிவு திரையிசைக்கு பேரிழப்பு.

அதேபோல், மின்னலே முதல் தொடர்ந்து வந்த கெளதம் - ஹாரிஸ் கூட்டணியும் முடிவுக்கு வந்துள்ளது. ஹாரிஸை தவிர்த்து, தனது சென்னையில் ஒரு மழைக்காலம் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மானை ஒப்பந்தம் செய்தார் கெளதம். ஒரேயொரு படத்திற்காகத்தான் இந்த மாற்றம். ஹாரிஸிடமும் இதனை உறுதிப்படுத்தியிருக்கிறேன். எனது அடுத்தடுத்தப் படங்களுக்கு வழக்கம்போல் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பார் என்று அப்போது தெரிவித்தார் கெளதம்.

ஆனால், அது தற்காலிக பிரிவு அல்ல, நிரந்தர பிரிவு என அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார் ஹாரிஸ். இனி ஒருபோதும், கெளதமுடன் இணைந்து பணியாற்றுவதில்லை என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

திரையுலகில் பிரிவை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கும் இன்னொரு கூட்டணி பரத்வாஜ்-சரண். சரணின் முதல் படம் காதல் மன்னனிலிருந்து அவரது அனைத்துப் படங்களுக்கும் பரத்வாஜே இசை. ஆனால், சரண் தற்போது இயக்கிவரும் மோதி விளையாடில் ஹரிஹரனும் அவரது நண்பர் லெஸ்லியும் இணைந்து இசையமைத்து வருகின்றனர். வழக்கம்போல இது தற்காலிக பிரிவு என்கிறார் சரண்.

தற்காலிகமா, நிரந்தரமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்