‌தினா இசை‌யி‌ல் குஷ்பு பாடினா‌ர்!

புதன், 7 ஜனவரி 2009 (20:58 IST)
எல்லா நடிகைகளுக்கும் வாழ்க்கையில் ஒரு படத்தையாவது இயக்கிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிலருக்கு சொந்தக் குரலில் தனக்கு டப்பிங் பேச வேண்டும் என்று இருக்கும்.

இன்னொரு முக்கியமான விஷயம், ஒரு படத்திலாவது பாட வேண்டும் என்பதுதான். இது இப்போதுள்ள நடிகைகளுக்கு மட்டுமல்ல பிளாக் அண்ட் ஒயிட் காலத்திலிருந்தே இருந்து வருகிறது.

அடிமைப் பெண் படத்தில் கூட ஜெயலலிதா 'அம்மா என்றால் அன்பு' என்ற ஒரு பாடலைப் பாடியிருப்பார். அதேபோல, 'அமர்க்களம்' படத்தில் அஜித் மனைவி ஷாலினி 'சொந்தக் குரலில் பாட' என்ற பாடலைப் பாடினார். அந்த வரிசையில் தற்போது குஷ்புவும் சேர்ந்திருக்கிறார்.

தினாவின் இசையில், ராஜ் டி.வி. தயாரிப்பில் டி.பி. கஜேந்திரன் இயக்கும் 'மகனே என் மருமகனே' என்ற படத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் குஷ்பு.

'மானாட மயிலா' நிகழ்ச்சியில் ஆடுபவர்களுக்கு மார்க் போடும் குஷ்புவுக்கு அவரின் இந்த பாடலுக்கு எத்தனை மார்க் கொடுக்கலாம் என்பது கேசட் ரிலீஸ் ஆனால் தெரிந்துவிடப் போகிறது. அப்படியே சுந்தர் சி படங்களுக்கும் ட்ரை பண்ணலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்