செலவு பற்றிய கவலையில்லை!

வியாழன், 30 அக்டோபர் 2008 (17:33 IST)
பிரபலமான இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் கமல் பத்து வேடங்களில் நடித்த தசாவதாரம் படத்திற்குப் பின் சரத்குமார் இரண்டு வேடங்களில் நடிக்கும் ஜக்குபாய் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இப்படத்தின் கதை முதலில் ரஜினி நடிப்பதாக விளம்பரமும் செய்யப்பட்டு பின் நின்றுபோனது. அதே கதையை சில மாற்றங்களுடன் சரத்குமாரை நாயகனாக்கிவிட்டார் கே.எஸ். ரவிக்குமார்.

பெரும்பாலான படப்பிடிப்புகளை ஆஸ்திரேலியா, கனடா போன்ற வெளிநாடுகளில் முடித்தவர் சில முக்கிய காட்சிகளை தாய்லாந்தில் எடுக்கத் திட்டமிட்டார்.

அதற்கு அந்த நாட்டு அரசாங்கம் பல்வேறு காரணங்களை சொல்லி அனுமதி மறுக்கவே கடுப்பான ரவிக்குமார், தனது படப்பிடிப்பு குழுவினரோடு மலேசியா சென்று தொடர்ந்து படப்பிடிப்பை நடத்திக்கொண்டு இருக்கிறார்.

இதனால் ஏற்பட்ட போக்குவரத்து செலவுகளை நினைத்து ரவிக்குமார் வருத்தப்பட, அதைப்பற்றி கவலை வேண்டாம் நினைத்த இடத்தில் படப்பிடிப்பை நடத்துங்கள் என்று ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

வெப்துனியாவைப் படிக்கவும்