கட்சி தொடங்கினால் இழப்பு - விஜய்!

திங்கள், 23 ஜூன் 2008 (19:36 IST)
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கு. எள் போட்டால் எண்ணெய்யாக ஒழுகும். அந்தளவு ரசிகர் கூட்டம். மேடையில் சத்யராஜ், ஸ்ரீமன், தரணி, ரமணா, நயன்தாரா, எஸ். தாணு, சேகரன், பெப்ஸி விஜயன்...

கொஞ்சம் ஆர்ப்பாட்டமாகவே கொண்டாடினார் விஜய் தனது 35வது பிறந்தநாளை. விழாவின் மு‌க்கிய அம்சம் விஜய் அறிமுகப்படுத்திய மன்றக்கொடி. வெள்ளைக் கொடியின் நடுவில் நீல வட்டம். அதில் சுட்டுவிரலை நீட்டியபடி விஜய் படம். கீழே வட்டத்தினுள், உன்னால் முடியும் என்ற வாசகம். கொடியில் மேல் பகுதியின் இடது ஓரம் 'உழைத்திடு', வலது ஓரம் 'உயர்ந்திடு' வாசகங்கள்.

ஈரோடு மன்ற விழாவில் கலந்துகொண்ட போது, ரசிகர் ஒருவர் அரசியல் கட்சி தொடங்கி, தனிக்கொடி அறிமுகப்படுத்தச் சொன்னதாகவும், அதனால்தான் மன்றத்திற்கென்று தனிக்கொடி அறிமுகப்படுத்தியதாகவும் கூறினார் விஜய். அப்படியால் அரசியல் கட்சி?

அனைத்துக் கட்சியிலும் எனக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். நான் கட்சி ஆரம்பித்தால் அது எனக்கு இழப்பாகவே இருக்கும் என்றார் உழாராக.

அரசியல் ஆர்வம் இல்லை. தனிக்கட்சி எப்போதும் இல்லை என்று விஜய் கூறினாலும், மன்றக்கொடி அறிமுகப்படுத்தியதை, தனிக்கட்சி விருந்துக்கு முன் கொடுக்கப்பட்ட வெல்கம் டிரிங்காக கருதி கொண்டாடி தீர்த்தது ரசிகர் குழாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்