தசாவதாரம் - தயாரிப்பாளர் பதில் மனு!

புதன், 21 மே 2008 (20:07 IST)
தசாவதாரத்துக்கு தடை கோரிய சர்வதேச ஸ்ரீவைஷ்ணவ தர்மா சம்ரக்சணா சங்கத்தின் தலைவரை 'உள்ளே' தள்ளும்படி பதில் மனு அளித்து எதிரிகளுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன்.

தடை மனுவுக்கு பதில் மனுவை தணிக்கைக் குழுவும், இயக்குனர் கே.எஸ். ரவிகுமாரும் ஏற்கனவே தாக்கல் செய்தனர். நேற்று தாக்கல் செய்தார் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன்.

மனுவில், தசாவதாரம் படத்துக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் மறுத்துள்ளார். படத்துக்கு ஆட்சேபம் தெரிவிக்க வேண்டியது மத்திய தணிக்கைக் குழு. அவர்களே சான்றிதழ் அளித்துவிட்டனர். தசாவதாரம் பெயருக்கு எந்தப் பிரிவிலும் தடை விதிக்க முடியாது. முப்பது வருடங்களுக்கு முன்பே இதே பெயரில் திரைப்படம் வெளிவந்துள்ளது. இப்படி மனு முழுக்க சுழன்றடித்துள்ளார் ரவிச்சந்திரன்.

மத நல்லிணக்கத்துக்கு எதிரான முயற்சியில் ஈடுபடுகிறவர்கள் மீது குண்டம் சட்டம் பாயும் என தமிழக அரசு கூறியுள்ளது. தசாவதாரத்துக்கு எதிரான வழக்கை மத நல்லிணக்கத்தை சீர்குலை‌க்கும் வகையில் மனுதாரர் போட்டுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கு போட்டவரின் பிபியை எகிற வைத்துள்ளார் ரவிச்சந்திரன்.

வரும் 27 ஆம் தேதி தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமையும் என்பது தெரியவரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்