நான் சுதந்திரத்தை விரும்பும் இயக்குனர் - வினயன்!

சனி, 3 மே 2008 (19:51 IST)
'நாளை நமதே' வினயன் இயக்கும் 3வது தமிழ்ப் படம். கேரளாவில் ஜனசேவா சிஷபவன் என்ற ஆசிரமம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டுகிறது. அங்குள்ள குழந்தைகள்தான் இப்படத்தில் நடிக்கின்றனர்.

இந்தியாவில் 10 கோடி பேர் வீடின்றி வாடுகின்றனர். ஆதரவற்ற குழந்தைகள் கடத்தப்பட்டு, துன்புறுத்தி பிச்சை எடுக்க வைக்கப்படுகின்றனர். அவர்களின் உண்மைக் கதையை சொல்லும் படம்தான் 'நாளை நமதே'.

இதில் கதாநாயகன்களாக ராம், ஷர்வானந்த் ஆகியோரும், கதாநாயகியாக தனுஷாவும் நடிக்கின்றனர்.

நேற்று நடைபெற்ற நாளை நமதே தொடக்க விழாவில் பேசிய வினயன், "பலரும் ஒதுக்கித்தள்ளும் இதுபோன்ற கதைகளை செய்வதே என் எண்ணம். என் பாணியில் என் படங்களை இயக்குவதுதான் எனக்குப் பிடிக்கும். சூப்பர் ஸ்டார் நடிகர்கள் படங்களில் சிக்கிக்கொள்வது சிறைவாசம். நான் சுதந்திரத்தை விரும்பும் இயக்குநர்" என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்