தோழர் ஜீவாவின் பதிவுகள்!

வெள்ளி, 25 ஏப்ரல் 2008 (18:52 IST)
வைகுண்டா ஃபிலிம்ஸ் சார்பாக தற்போது திரைக்கு வரவுள்ள படம் 'ஐயா வழி'. இப்படத்தின் இயக்குனர் பி.இ. அன்பழகன். ஐயா வழி பக்தர்களின் அன்பளிப்பால் அவரின் புகழைப் பரப்பும் வகையில் இந்தப் படத்தை மிகவும் சிரத்தையுடன் எடுத்து வருகிறார்.

இப்படம் திரையிட்டதற்குப் பின் கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ஜீவாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கவுள்ளார் அன்பழகன். இப்படத்தை வைகுண்டா ஃபிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.

பூதப்பாண்டி எனும் சிற்றூரில் பிறந்து உழைக்கும் வர்க்கத்திற்காக அரும்பாடுபட்டவர். தன்னலம் கருதாமல் பொதுநலம் மட்டுமே தன் லட்சியமாகக் கொண்டு தன் இறுதி மூச்சுவரை வாழ்ந்து வந்தவர் ஜீவா.

கவிஞர் பொன்னீலன், ஜீவா பற்றிய ஆய்வை மேற்கொண்டு பல்வேறு தகவல்களை திரட்டி வைத்துள்ளார். அதன் அடிப்படையில் இந்தப் படத்தை மிகவும் தரமான படமாக உருவாக்கவுள்ளார்.

இப்படத்தின் ஒளிப்பதிவை செல்வாவும், இசையை பகவதி சிவநேசனும், எடிட்டிங்கை லெனினும் கவனிக்கவுள்ளனர். தன் ஒவ்வொரு வேர்வைத் துளியையும் அடுத்தவருக்காக சிந்தி உழைத்த ஜீவாவின் பதிவுகள் மற்ற அரசியல் கட்சிகளுக்கும் ஒரு பாடமாகவும் அமையும்.

இந்த முயற்சிக்காக பல்வேறு பிரபலங்களிடமிருந்து பாராட்டினை பெற்று வருகிறார் அன்பழகன்.

வெப்துனியாவைப் படிக்கவும்