கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி

சனி, 3 ஜனவரி 2009 (15:38 IST)
பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர்மரபினருக்கு கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பங்கஜ்குமார் பன்சல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழக அரசு சிறுபான்மையினர் அல்லாத பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த 200 பேர்களுக்கு கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி அளிக்க உள்ளது. இந்த பயிற்சி பெற விரும்புபவர்கள் 20 வயதில் இருந்து 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று இருக்க வேண்டும். தேர்வு செய்யபடுவோர்களுக்கு தமிழக அரசின் சாலை போக்குவரத்து நிறுவனத்தின் கும்மிடிப்பூண்டி, திருச்சி, மதுரை, பொள்ளாச்சி, சேலம் ஆகிய ஊர்களில் உள்ள மையங்களில் 12 வாரகாலத்திற்கு பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி கட்டணம் ரூ.19,500-ஐ அரசே செலுத்திவிடும். இந்த திட்டத்தில் பயிற்சி பெற விரும்புபவர்கள் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கல்விச்சான்று, வருமான சான்று, சாதிசான்று மற்றும் வாகன ஓட்டுனர் உரிமத்தின் நகலுடன் தனி அலுவலர் சாலைபோக்குவரத்து நிறுவனம், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூவர் மாவட்டம் என்ற முகவரியில் வருகிற 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இது தொடர்பான மேலும் விவரங்களை சிவகங்கை அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம்" என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்