கைலாஷ் மானசரோவரை பயணம் நெருங்க நெருங்க, சத்குரு எங்களை பலவாறாகத் தயார்படுத்தினார்.
குருவின் கை பிடித்து ஈசனின் இருப்பிடம் போகப் போகிறோம் என்ற உணர்வு உயிரில் கலந்து எங்களைப் பரவசப்படுத்தியது. புகைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்து அதிசயித்த அதே பிரமாண்டம் உள்ளே உயிர்த்தெழுந்தது.
WD
அந்திசாயும் மாலை வேளையில் நாங்கள் மானஸரோவரை வந்தடைந்தோம். இறைமை இயற்கையாய் விரிந்திருந்த அந்த இடத்தின் ஆழ்ந்த நிச்சலனம் எங்களை ஒவ்வொரு அடியிலும் ஆட்கொண்டது. அந்த மஹா அனுபவம் வார்த்தைகளாய் வெளிப்படாமல் எங்கள் கன்னங்களில் பரவசக் கண்ணீராய் வழிந்தோடியது. அந்த அனுபவங்களில் சத்குருவும் ஆழ மூழ்கியிருந்தார்...
அவரது அனுபவங்களை பின்னர் நடந்த சத்சங்கத்திலும் பகிர்ந்துகொண்டார்.
“இங்கிருக்கும் சூழ்நிலை மிகமிக விசித்திரமாய் உள்ளது. கடந்த சில பிறவிகளில் ஆன்மிகம் தேடி சக்திவாய்ந்த பல இடங்களில் இருந்திருக்கிறேன். ஆனால் இப்படிப்பட்ட வேறு ஒரு இடம் இருக்குமா என்பதே சந்தேகம்தான். இந்தப் பூமிக்கே சொந்தமில்லாத பல உயிர்களும் சக்தி வடிவங்களும் இங்கே இடைவிடாமல் உலவிக்கொண்டு இருக்கின்றன."
இங்கே நடப்பது ஒருவருடைய கற்பனைக்கும் தெளிவுக்கும் அப்பாற்பட்டதாக உள்ளது. பல சூழ்நிலைகளில் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் நிகழ்ந்த தருணங்களை நான் கண்டிருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு அதிகமாகவும் வகைவகையாகவும் பார்த்ததில்லை. அநேகமாக இது பல கோடி வருடங்களாக தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கலாம்.
இவ்வளவு உயிர்களை இந்த ஏரி எப்படி ஈர்த்தது? இந்த உயிர்கள் எதுவும் இந்த கிரகத்தைச் சேர்ந்தவை அல்ல. அவற்றில் ஒரு சில மட்டும்தான் தனித்த உயிர்களாக உள்ளன. மற்றவை கூட்டுயிர்களாகத் தெரிகின்றன. நிச்சயம் அவை இந்த பூமிக்குரியவை அல்ல’’ என்று அவர் சொன்னபோது, பூமியில் அந்த இடம் பெற்றிருக்கும் பிரம்மாண்ட சக்தி எங்களை வியப்பில் ஆழ்த்தியது.
மானஸரோவரை நெருங்கும் தருணத்திலேயே அங்குள்ள நிகழ்வுகளை உணர்ந்த சத்குரு சிறிது பரீட்சித்துப் பார்க்க விரும்பி, சில ஆன்மிகப் பரிசோதனைகளையும் மேற்கொண்டார். அந்த அரிய அனுபவத்தையும் அவர் எங்களோடு பகிர்ந்துகொண்டார்.
WD
‘‘நான் என்னோடு வந்த பெண்ணை முதலில் இந்த சூழ்நிலையை ஏற்கும்விதமாகத் தயார்படுத்தினேன். ஒரு கண நேரத்துக்குள்ளாக இங்குள்ள உயிர்கள் அவரது சுவாதிஷ்டானாவில் சீறிப் பாய்ந்து சகஸ்ராரம் வழியாக வெளியேறின. இன்னும் சிறிது நேரம் அவற்றைப் பிடித்துவைத்திருக்க முடியும். ஆனால் வேறு சில விளைவுகளை நாம் சந்திக்க நேரும் என்பதால் அதைத் தவிர்த்தோம். அந்த நேரத்தில் அவரது தலைமீது ஒரு கிண்ணம் நிறைய தண்ணீரை வைத்திருந்தேன். அவை உள்ளே புகுந்து வெளியேறியவுடன் அந்த நீர் கொதிக்கத் தொடங்கியது. உண்மையிலேயே அந்த நீர் கொதித்தது.
நாம் பரீட்சித்தது போல் ஏற்கனவே நடந்துள்ளதா தெரியவில்லை. என்னால் நாளை காலை இந்த ஏரி முழுவதையும் கொதிக்கச் செய்ய முடியும். குறைந்தபட்சம் உங்கள் அனைவரையும் இதில் ஈடுபடுத்தினால் வெதுவெதுப்பாக்கவாவது முடியும்’’ என்றார்.
கால் நுனி பட்டாலே குளிரில் நடுங்கச் செய்யும் ஏரி நீர் கொதித்தது என்பதைக் கேட்ட நாங்கள் நடந்தது என்ன என்பதை அறியும் ஆவலில் இருந்தோம். எங்களில் ஒருவர் சத்குருவிடம் கேட்டார். ‘‘கிண்ணத்தில் இருந்த தண்ணீர் கொதித்ததாகச் சொன்னீர்கள். அந்த உயிர்கள் அதன் வழியே ஊடுருவியதால் அப்படிக் கொதித்ததா?’’
‘‘மானஸரோவருக்கு 3-4 கி.மீ முன்னதாகவே நாங்கள் காரை நிறுத்திவிட்டோம். ஏரி கண்ணில்பட்ட உடனே நான் ‘அற்புதம்’ என்று கூவினேன். அந்தக் காட்சி என்னுள் ஆழமாய்த் தாக்கியது. அங்கே நடக்கும் நிகழ்வுகளை உடனே நான் அறிந்துகொண்டேன். அருகே வரவர பல விஷயங்கள் அங்கே சுறுசுறுப்பாகவும் உயிர்ப்போடும் நடப்பதைக் காண முடிந்தது. எந்தவிதமான சாதனாக்களை அங்கே மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து நான் யோசிக்கத் தொடங்கினேன். ஏனென்றால் சாதாரணமாக நாம் செய்யும் ஆத்ம சாதனைகள் நம் சக்தியை மேலும் மேலும் சூட்சுமமாக்குவது, அதன் மூலம் ஆன்மிகச் சாத்தியங்களை நெருங்க நம்மைத் தயார்படுத்துவது.
ஆனால், இங்குள்ள தன்மை முற்றிலும் வித்தியாசமானது. அதனால் நான் வேறுவிதமாக முயற்சித்தேன். அவர்களால் தட்டிக்கழிக்க முடியாத ஓர் அழைப்பாக அந்தச் சூழலை உருவாக்கினேன். எனவே அவை ஒரு கணத்தைக்கூட வீணடிக்கவில்லை. உடனடியாக வந்தன. அந்தப் பெண்ணின் வேலை, சகஸ்ராரத்தைத் தவிர மற்ற சக்கரங்களில் தீவிர கவனம் கொள்வதுதான்.
நாம் அந்த தண்ணீர்க் கிண்ணத்தை தலையில் வைத்திருக்காவிடில், அவரது தலை பொசுங்கிப் போயிருக்கும். எனவே கிண்ணத்தை ஒன்று அல்லது ஒன்றரை நிமிடங்களுக்கு தலை மீது வைத்திருந்தோம். ஏனென்றால் அவரால் அது இல்லாமல் அந்த உயிர்களைத் தாங்கிக்கொள்ள முடியாது. அப்படி முயற்சித்தால் அவை உடலின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வெடித்து வெளியேறும். எனவே அவை ஊடுருவிச் செல்ல நாம் ஒரு பாதையை ஏற்படுத்தினோம். அதனால்தான் அது இவ்வளவு பாதுகாப்பாக நடந்தது’’ என்றார்.
சத்குரு அந்த இடத்தில் ஆர்ப்பரிக்கும் சக்தியின் அளப்பரிய தன்மைகளை எல்லா ஆத்ம சாதகர்களுக்கும் பயன்படும்விதமாய் உருவாக்க சிலவற்றை மேற்கொள்ளப்போகிறார் என்பது மட்டும் புரிந்தது. மானஸரோவரின் மடியில், குருவின் திருவடியில் இருக்க நேர்ந்த அந்தத் தருணம் வாழ்வின் மகத்துவத் தருணங்களாய் இன்னும் நினைவில் நிற்கிறது. இன்னும் இன்னும் நேரப்போகும் அனுபவங்களை எதிர்நோக்கி அவரைப் பின் தொடர்ந்தோம்!