ஏமன் அதிபரின் தலைமை அதிகாரி கடத்தப்பட்டார்

ஞாயிறு, 18 ஜனவரி 2015 (06:46 IST)
ஏமன் நாட்டில், அந்நாட்டு அதிபர் அப்த்ரபு மன்சூர் ஹதியின் தலைமை அதிகாரி கடத்தப்பட்டுள்ளார்.

அஹ்மத் ஆவாத் பின் முபாரக் என்ற அந்த அதிகாரியும் அவரது இரண்டு பாதுகாவலர்களும் சனிக்கிழமையன்று காலையில் கடத்தப்பட்டனர். 
 
தலைநகர் சனாவின் மையப் பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றது.
ஷியா ஹௌதி என்ற கலகக் குழுவினர்தான் இந்தக் கடத்தலில் ஈடுபட்டிருக்கக்கூடும் என ஏமன் அதிகாரிகள் கருதுகின்றனர். தலைநகரின் பெரும்பகுதி அவர்களது கட்டுப்பாட்டில்தான் இருந்துவருகிறது.
 
2011ஆம் ஆண்டில் அப்போதைய அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக மக்கள் திரண்டெழுந்து நடத்திய போராட்டத்தின் முடிவில் அவர் பதவியிலிருந்து கீழிறங்கினார். அப்போதிலிருந்து ஏமனில் ஸ்திரமான அரசு இல்லை.
 
ஹௌதிகளுக்கும் சன்னி கலகக் குழுவினருக்கும் இடையில் நடக்கும் மோதலில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டுவருகின்றனர்.
 
கடத்தலுக்குக் காரணம் என்ன?
 
அதிபருடனான சந்திப்பின்போது, புதிய அரசியல் சாஸன வரைவு ஒன்றை பின் முபாரக் கொடுக்கவிருந்தார் என்றும் அதைத் தடுப்பதற்காகவே ஹௌதிக்கள் அவரைக் கடத்தியிருக்கலாம் என சிலர் கூறியதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
 
கடந்த ஆண்டு முபாரக்கை பிரதமராக நியமிக்க முயற்சிகள் நடந்தபோது, கலகப்படையினர் அதனைத் தடுத்து நிறுத்தினர்.
 
புதிய அரசியல் சாஸனப்படி, ஏமன், மத்திய அரசால் கட்டுப்படுத்தப்படும் பிராந்தியங்களாகப் பிரிக்கப்படும். இதனை ஹௌதிக்களும் தென்பகுதி பிரிவினைவாதிகளும் எதிர்த்துவருகின்றனர்.
 
ஈரானின் கைப்பாவையாக கலகக்காரர்கள் செயல்படுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அவர்கள் அதனை மறுத்துவருகின்றனர்.
 
ஃப்ரான்சில் சார்லி எப்தோ அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் திட்டமிட்டு, நிதியுதவி அளித்தது தாங்கள்தான் என ஏமனின் அல் - காய்தா பிரிவு ஒரு வீடியோவை வெளியிட்டது. ஆனால், ஆதாரம் எதையும் அவர்கள் அளிக்கவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்