எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை சுடும் உரிமை எங்களுக்கு உள்ளது - இலங்கை அமைச்சர் சாமிநாதன்

புதன், 29 ஏப்ரல் 2015 (14:48 IST)
எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை எங்கள் பாதுகாப்புக்காக சர்வதேச சட்டப்படி துப்பாக்கியால் சுடும் உரிமை உள்ளது என்று இலங்கை அமைச்சர் சாமிநாதன் கூறினார்.
 
இன்று காலை சென்னை வந்த இலங்கையின் மறு சீரமைப்பு மற்றும் மறு வாழ்வுத்துறை அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். 
 
அப்போது அவர் கூறுகையில், இலங்கையில் இருந்து வெளியேறிச் சென்று, பிற நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்கள் மீண்டும் இலங்கைக்கு வந்தால் அவர்களை வரவேற்க தயாராக உள்ளோம். மீனவர்கள் பிரச்சனையை தீர்ப்பது இந்தியாவின் கையில்தான் உள்ளது. தமிழக மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கிறார்கள்.
 
எல்லை தாண்டும் மீனவர்களை இந்திய அரசு தான் கட்டுப்படுத்த வேண்டும். எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை எங்கள் பாதுகாப்புக்காக சர்வதேச சட்டப்படி துப்பாக்கியால் சுடும் உரிமை உள்ளது என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்