இலங்கை நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவராக சம்பந்தன் தேர்வு

வியாழன், 3 செப்டம்பர் 2015 (10:32 IST)
38 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
இலங்கையில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 196 தொகுதிகளில் ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி 93 இடங்களையும், அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திராகட்சி கூட்டணி 83 இடங்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு 10 இடங்களையும் பெற்றது. 
 
போதிய பெரும்பான்மை இல்லாததால் அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியின் ஆதரவுடன் ரணில் விக்கிரம சிங்கே பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார்.
 
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் 10 இடங்களில் வெற்றி பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எதிர்கட்சி தலைவராக  தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் வெளியிட்டுள்ளார்.
 
38 ஆண்டுகளுக்கு பிறகு தமிழர் ஒருவர் இலங்கை நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழர்களுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்  என்று கருதப்படுகிறது. 
 
முன்னதாக 1977 ல் அமிர்தலிங்கம்  என்பவர் இலங்கை நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்