வீடியோ ரீல்ஸ் செய்ததால் ஆத்திரம்! தங்கையை சுட்டுக் கொன்ற அண்ணன்!

செவ்வாய், 2 ஜனவரி 2024 (09:58 IST)
டிக்டாக்கில் தொடர்ந்து வீடியோ ரீல்ஸ் செய்து வந்த தங்கையை வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும்போதே அண்ணன் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் வீடியோ ரீல்ஸ் தளங்களில் முக்கியமானது டிக்டாக் என்னும் சீன செயலி. இந்த டிக்டாக்கிற்கு இளைஞர்கள் பலர் அடிமையாவதால் ரீல்ஸ் மோகத்தில் ஆபத்தான செயல்களை செய்வதாகவும், அதை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகள் இருந்து வருகின்றன. இந்தியாவில் இந்த செயலி முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தானில் டிக்டாக் செயலி தடை செய்யப்படுவதும், சில காலத்திற்கு பின் தடை நீக்கப்படுவதுமாக இருந்து வருகிறது. பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் குஜராத் மாவட்டத்தை சேர்ந்த பதின்வயது இளம்பெண் ஒருவர் அடிக்கடி டிக்டாக்கில் ரீல்ஸ் வீடியோ செய்து வந்துள்ளார். இவ்வாறு ரீல்ஸ் செய்யக்கூடாது என அந்த பெண்ணின் சகோதரன் எச்சரித்தும், அதை கண்டுகொள்ளாமல் இளம்பெண் டிக்டாக் வீடியோ செய்து வந்ததால் ஆத்திரமடைந்த அண்ணன் தனது தங்கையை சுட்டுள்ளார். இதில் அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகியுள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தலைமறைவான அண்ணனை தேடி வருகின்றனர். டிக்டாக் மோகத்தால் ஒரு உயிர் போன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்