பாகிஸ்தான் 2020-க்குள் 200 அணு ஆயுதங்களைத் தயாரிக்கத் திட்டம்

சனி, 29 நவம்பர் 2014 (09:34 IST)
பாகிஸ்தான் 2020 ஆண்டிற்குள் 200 அணு ஆயுதங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று கூறியுள்ளது.
 
சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அணு ஆயுத ஆய்வு அறிக்கையில், பாகிஸ்தான் 2020-க்குள்ளாக 200 அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. தற்போது அணு ஆயுத வளர்ச்சியில் வேகமாக வளர்ந்து வரும் நாடு பாகிஸ்தான் என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த அறிக்கையில், பாகிஸ்தானின் அணுவாயுத வல்லமையால் இந்தியா, சீனா, ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றிற்கு ஏற்படும் பாதுகாப்புகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து சிறப்பு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த ஆய்வில், பாகிஸ்தான் அணுவாயுதங்களை பயன்படுத்தி க்ரூஸ் ஏவுகணைகள், விமானத் தாக்குதல்கள், கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள் போன்ற சிறப்பு ஆயுதங்களை வடிவமைத்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
2008ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே அணு ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டதிலிருந்து தெற்காசியப் பகுதியில் ஆயுத சம வல்லமை ஏற்படுவதற்காகவே பாகிஸ்தான் அணு ஆயுத உற்பத்தியை அதிகரித்து வந்துள்ளது. இதற்கான முக்கிய காரணம், எல்லையில் ஏற்படும் பிரச்சனை காரணமாக இந்திய எந்த நேரத்தில் போர் தொடுக்கலாம் என்ற அச்சமே என்று அந்த ஆய்வு கருதுகிறது.
 
அறிக்கையின் கணக்குப்படி, இந்தியாவில் 90 - 110 அணு ஆயுதங்களும், சீனாவில் தோராயமாக 250 அணு ஆயுதங்களும்  தாக்குதலுக்கு தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்