நிலவிலிருந்து வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியது சீன விண்கலம்

சனி, 1 நவம்பர் 2014 (15:35 IST)
கடந்த 8 நாட்களுக்கு முன்னர் சீனா நிலவுக்கு அனுப்பியது ஆளில்லா விண்கலம் பல அற்புதமான படங்களை பிடித்துவிட்டு, மீண்டும் பூமிக்கு வெற்றிகரமாகத் திரும்பி வந்துள்ளது.
 
விண்வெளியில் உள்ள பல்வேறு கிரகங்கள் குறித்து ஆராய்வதற்காக உலக நாடுகள் அனைத்தும் விண்கலங்களை அனுப்பி வருகின்றன. சீனாவும் கடந்த 8 நாட்களுக்கு முன் நிலவுக்கு முதன்முறையாக ஆளில்லா விண்கலத்தை அனுப்பியது.
 
நிலாவின் சுற்று வட்டப்பாதைக்குத் திட்டமிட்டபடி சென்றடைந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பை அற்புதமாக படம் எடுத்து அனுப்பியது.
 
இதைத் தொடர்ந்து, அந்த ஆளில்லா விண்கலத்தை பூமிக்கு திரும்ப கொண்டு வரும் முயற்சிகளை சீன விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். 
 
இந்நிலையில், இன்று காலை 6.13 மணியளவில் சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான மங்கோலியாவில் அந்த விண்கலம் வெற்றிகரமாக பூமியில் தரையிறங்கியது.
 
இதைத் தொடர்ந்து, சீன விண்வெளி விஞ்ஞானிகள் விண்கலம் தரையிறங்கிய இடத்துக்கு விரைந்து சென்று விண்கலத்தை மீட்டனர்.
 
அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி பூமிக்கு திருப்பிக் கொண்டுவரும் சாதனையை சீனா வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்