மந்திர தந்திர வேலைகளுக்காக மனிதர்களின் தோலை உரிக்கும் கும்பல்..!

வியாழன், 23 ஏப்ரல் 2015 (17:43 IST)
மந்திர தந்திர வேலைகளுக்காக மனிதர்களின் தோலை உரிக்கும் கும்பலை கண்டவுடன் சுடுமாறு மலாவி நாடு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
அல்பினிசம் என்று சொல்லப்படுவது தோல் வெண்மையாக மாறும் நோயாகும். மரபணு குறைபாடு காரணமாகவே இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தோல் அசாதாரணமான வெண்மைத் தோற்றத்துடன் காணப்படும். தலைமயிர் பொன்னிறம் கலந்த வெண்மையுடன் காணப்படும்.
 

 
அதிக அளவு சூரிய ஒளி தோலில் படும்போது பலருக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இவர்களுக்கு பார்வை குறைபாடு, ஒளிவெறுப்புத் தன்மை காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
 
எனினும் தென்கிழக்கு ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டில் சூனியம், மாந்திரீகங்களுக்காக அல்பினோ மனித வேட்டை நடைபெறுகிறது. இவர்களுடைய தோல் அதிர்ஷ்டத்தை பெற்றுத்தருவதாக அவர்கள் நம்புகிறார்கள். அதேபோன்று சூனியம் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
 
ஆதலால் அல்பினோ மனிதர்களை கொன்று அவர்களுடைய தோலை பெருந்தொகையான பணத்துக்கு விற்பனை செய்யும் குழு அங்கு இயங்குகிறது. இந்த கும்பல், அல்பினிசம் என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களை கடத்திச் சென்று அவர்களுடைய தோலை சூனியம் மற்றும் மந்திர தந்திர வேலைகளுக்காக பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
 

 
அவ்வாறு கடத்தல்களில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்தோரை காணும் இடத்தில் சுடுமாறு அந்நாட்டு அரசாங்கம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அல்பினோ மனிதர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல், கொலைகள் இடம்பெற்று வருவதால் அவர்களில் சிறு எண்ணிக்கையானோர் சிறப்பு முகாமில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
 
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் பிரகாரம் கடந்த 6 மாதங்களில் 15 பேர் இனந்தெரியாத குழுவினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்களின் மேற் தோல் அகற்றி எடுக்கப்பட்டு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்