சில மாதங்களுக்கு முன் இந்தியா மற்றும் மாலத்தீவுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்த நிலையில், தற்போது இந்தியாவின் நட்பு நாடாக மாலத்தீவு மாறியதை அடுத்து, உலக அளவிலான தூதராக பாலிவுட் நடிகை காத்ரீனா கைப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாலத்தீவுக்குக் கிடைக்கும் ஒரே முக்கிய வருமானம் சுற்றுலாத்துறை என்பதும், குறிப்பாக இந்தியர்கள்தான் அதிக அளவில் அங்கு சுற்றுலா சென்றனர் என்பதும் தெரிந்ததே. ஆனால், திடீரென இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை மாலத்தீவு அதிபர் எடுத்ததால், இந்தியர்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல மாட்டோம் என்று கோஷம் எழுப்பினர். இதனால், மாலத்தீவின் வருமானம் குறைந்தது. அதன் பின்னர், மாலத்தீவு சமாதானமாகி இந்தியாவின் நட்பு நாடாக மாறியது.
இந்த நிலையில், தற்போது கத்ரீனா கைப்பை உலக அளவிலான தூதராக மாலத்தீவு அரசு நியமனம் செய்துள்ளது. "ஒரு வெற்றிகரமான நடிகை மட்டுமல்லாமல், உத்வேகம் அளிக்கும் ஒரு வணிக பெண்மணி என்றும், எனவே அவர் எங்கள் விளம்பர தூதராக இருப்பதற்கு சரியான நபர் என்றும்," மாலத்தீவு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பல இந்தியர்கள் சமூக வலைதளங்களில் 'மாலத்தீவைப் புறக்கணிப்போம்' என்ற இயக்கத்தைத் தொடங்கிய நிலையில், தற்போது மாலத்தீவுக்குத் தூதராகவே ஒரு இந்திய நடிகை நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.