இலங்கையில் உள்ள மினுவாங்கொடை பழைய சந்தை கட்டிடத் தொகுதியில் மொஹைதீன் தங்க நகை விற்பனை நிலையம் எனும் பெயரில் நகைக்கடை ஒன்று உள்ளது. குறித்த நகைக்கடைக்கு நேற்று மாலை 6.45 மணிக்கு இரு மோட்டார் சைக்கிள்களில் நான்கு பேர் வந்துள்ளனர்.
அவர்களில் இருவர் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்திருந்துள்ளதுடன் ஏனைய இருவரும் தமது முகத்தை துணியால் சுற்றி மறைத்த வண்ணம் இருந்துள்ளனர். திடீரென கடைக்குள் புகுந்த இவர்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியுள்ளனர்.
மேலும், கடையில் உள்ள நகைகளையும் பணத்தினையும் கொள்ளையிட ஆரம்பித்துள்ளனர். இதன் போது கடையின் உரிமையாளரான மொஹைதீன் என்பவரும் கடையின் சேவையாளர்களான மேலும் மூவரும் நோன்பு திறந்த வண்ணம் இருந்துள்ளனர்.
கொள்ளையர்கள் இவ்வாறு திடீரென புகுந்து கொள்ளையடிப்பதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது கொள்ளையர்களில் ஒருவரை உரிமையாளர் மொஹைதீன் பாய்ந்து பிடிக்க முற்பட்டுள்ளார். இதனையடுத்து கொள்ளையர்களில் ஒருவர் சராமாரியாக துப்பாக்கி சுட்டுள்ளனர்.
இதில், கடையின் உரிமையாளரும், கடையில் பணிபுரியும் ஊழியரும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பின்னர் கொள்ளையிட்ட நகைகள் பணத்துடன் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து காயமடைந்த இருவரும் மினுவாங்கொடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால், மொஹைதீன் உயிரிழந்திருந்ததாக தகவல்கள் தெரிவித்தன. காயமடைந்த கடையின் ஊழியர் தொடர்ந்து மினுவாங்கொடை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.