செல்பி மோகத்தில் உயிர் இழந்தவர்களில் இந்தியர்களே அதிகம் - ஆய்வில் அதிர்ச்சி

வியாழன், 17 நவம்பர் 2016 (18:35 IST)
ஆபத்தான இடங்களில், தன்னைத் தானே புகைப்படம் எடுக்கும் போது, விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தவர்களில் இந்தியர்களே அதிகம் என ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.


 

 
செல்போன் வந்த பிறகு, செல்பி எடுக்கும் பழக்கம், அனைத்து நாட்டினரிடமும் அதிகரித்து வருகிறது. உயரமான மலை, இடம் மற்றும் ஆபத்தான இடங்களில் சென்று செல்பி எடுப்பதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தங்களை பிரபலப்படுத்தவே இப்படி செய்கின்றனர். அப்படி செல்பி எடுப்பது, சில சமயங்களில் ஆபத்தில் முடிவதும் உண்டு. 
 
இந்நிலையில், ‘என் வாழ்வை நானே அளித்தல்’ என்கிற தலைப்பில், அமெரிக்காவின் கார்னகிமெலன் பல்கலைக்கழகம், இந்தியாவின் இந்திர பிரஸ்தா என்ற பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து, செல்பி குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. 
 
அதில், உலகம் முழுவதும் 127 பேர் இதுவரை செல்பி எடுக்கும் போது மரணம் அடைந்ததாக தெரிய வந்தது. அதில் 76 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதுதான் அதிர்ச்சி தகவல்.
 
அதிலும், அதில் பெரும்பாலானோர், 24 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இவர்களெல்லாம் உயரமான மலை, ஓடும் ரயில் மற்றும் கடற்கரை அருகில் நின்று செல்பி எடுத்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்