10 நிமிடத்தில், 105 கிமீ, மணிக்கு 1,200 கிமீ வேகம் ஹைப்பர்லூப் போக்குவரத்து: துபாய் புதிய திட்டம்
வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (12:44 IST)
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூட்டமைப்பில் உள்ள முக்கிய நகரமான ஃபியூஜைராவுக்கு ஹைப்பர்லூப் போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஆய்வுகளில் துபாய் அரசு நிர்வாகம் இறங்கியிருக்கிறது.
துபாய்- ஃபியூஜைரா நகருக்கு இடையிலான 105 கிமீ தூரத்தை வெறும் 10 நிமிடங்களில் கடப்பதற்கு ஏதுவாக இந்த ஹைப்பர்லூப் சாதன போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த துபாய் ஆர்வமாக இறங்கியிருக்கிறது.
மேற்கு- கிழக்கு பகுதிகளில் அமைந்திருக்கும் இந்த இரு ஐக்கிய அரபு அமீரக நகரங்களையும் மிக விரைவாக இணைப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தற்போது இரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் இரண்டு மணி நேரமாக உள்ளதை, வெறும் 10 நிமிடங்களாக குறைக்கும் முயற்சியாக இது இருக்கும்.
இரு நகரங்களுக்கு இடையிலான ஹைப்பர்லூப் போக்குவரத்துக்கான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. வரும் 2020ம் ஆண்டிற்குள் ஹைப்பர்லூப் அல்லது மணிக்கு 1,200 கிமீ வேகத்தில் செல்வதற்கான போக்குவரத்து கட்டமைப்பை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று இலக்கு வைத்து துபாய் அரசு களமிறங்கி இருக்கிறது.
டெஸ்லா எலக்ட்ரிக் கார் நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலான் மஸ்க் இந்த யோசனையை முதலில் தெரிவித்தார், இதனை மேம்படுத்துவதற்கு உலக அளவில் அனைத்து பொறியாளர்களும் அழைப்பு விடுத்துள்ளார்.
நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் இந்த ஹைப்பர்லூப் கட்டமைப்பு பாதிக்கப்படாது. அனைத்து செயல்பாடுகளும் தானியங்கி முறையில் நடக்கும். இதனால், மனித தவறால் ஏற்படும் விபத்துக்கள் தவிர்க்கப்படும் என தெரிகிறது.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்