இந்து கோவில்கள் தாக்குதல்.. இந்துக்கள் மீது வன்முறை.. இட ஒதுக்கீடு போராட்டம் போல் தெரியலையே!

Siva

செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (07:30 IST)
வங்கதேசத்தில் இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு என்று ஆரம்பித்த போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் தற்போது அந்த கலவரம் இந்துக்களுக்கு எதிராக மாறி இருப்பதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வங்கதேச அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்த இட ஒதுக்கீடு திட்டத்தை எதிர்த்து அங்குள்ள மாணவர்கள் முதலில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் மாணவர்கள் மற்றும் அரசு ஆகியவற்றுக்கு இடையே இருந்த நிலையில் திடீரென இந்த போராட்டத்தில் வன்முறையாளர்கள் புகுந்ததால் வங்கதேச நாடே தீப்பற்றி எரிந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த போராட்டம் இட ஒதுக்கீடு போராட்டம் என்று இருந்த நிலையில் இந்துக்களுக்கு எதிரான போராட்டமாக மாறி உள்ளதாகவும் இந்து கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்துக்களை குறிவைத்து தாக்குதல் நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள இந்திய கலாச்சாரம் மையம் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இஸ்கான் கோவில் உள்பட 4 இந்து கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. அதுமட்டுமின்றி இந்துக்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை தேடி கண்டுபிடித்து அவர்கள் மீது தாக்குதல் நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.

இதற்கு உடனடியாக இந்திய அரசு தலையிட்டு வங்கதேசத்தில் உள்ள இந்துக்களை காப்பாற்ற வேண்டும் என்றும் இந்து கோவில்களை சேதமடையாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்