ஐந்து வயதான மகளை கொன்று வீட்டிற்கு தீ வைத்து நாடகமாடிய தந்தை

வியாழன், 28 ஏப்ரல் 2016 (14:33 IST)
கனடாவில் தந்தை ஒருவர் தனது ஐந்தே வயதான சொந்த மகளை கொடூரமாக கொலை செய்து விட்டு நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

 
இரு தினங்களுக்கு முன்னர் கார்போனேர் நகரில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்று தீயிக்கிரையானதாக தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் வந்துள்ளது.
 
இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு விரைந்த மீட்பு குழுவினர் பெரும் போராட்டத்திற்கு பின்னர் நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அந்த நெருப்பில் சிக்கி ஐந்து வயதான சிறுமி குயின் லார்னே-கே உயிரிழந்துள்ளதாக தெரிய வந்தது.
 
மேலும் சிறுமியின் தந்தை ட்ரெண்ட் பட் [37] படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த தீ விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
 
அப்போது, தீ விபத்து சம்பவம் திட்டமிடப்பட்ட செயல் என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். தந்தை ட்ரெண்ட் பட் வேண்டுமென்றே வீட்டிற்கு நெருப்பு வைத்திருப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளதையும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
 
இதனையடுத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் சிறுமியின் தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
 
இதனிடையே சிறுமி குயின் லார்னே-கேயின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. விசாரணைக்கு பின்னரே குடியிருப்புக்கு நெருப்பு வைத்ததன் பின்னணியும் குழந்தை பலியானதன் காரணமும் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
சிறுமியின் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள கார்போனேர் நகர மேயர் ஜார்ஜ் பட், ’இது ஒரு சோகமான சம்பவம். நாம் ஒரு சிறுமியை இழந்துவிட்டோம். ஒவ்வொருவரும் துயரமாக உணர்கிறார்கள். அனைவரும் இது குறித்தே பேசுகிறார்கள். பயங்கரமான, கொடூரமான சோக நிகழ்ச்சி இது” என்று கூறியுள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்.....

வெப்துனியாவைப் படிக்கவும்