நிலநடுக்கத்திற்கு நேபாளத்தில் பலியானோர் எண்ணிக்கை 5,000 ஐ தாண்டியது

புதன், 29 ஏப்ரல் 2015 (07:42 IST)
நேபாளத்தில் ஏற்பட்ட  சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5000 ஐ தாண்டியுள்ளது, கட்டட இடிபாடுகளில் மேலும் ஆயிரக்கணக்கானோர் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.


 

 
நேபாள நாட்டின் மையப்பகுதியில் உள்ள லாம்ஜங் மாவட்டத்தில் சனிக்கிழமை நண்பகல் மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
 
ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், சுமார் இரண்டரை நிமிடங்களுக்கு நீடித்தது. பின்னர், சிறிய அளவிலான கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் மீண்டும் பல முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன.
 
இந்த நிலநடுக்கத்தால் நேபாளம் முழுவதும் உள்ள பெரும்பாலான கட்டடங்கள் தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 5057 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அங்கு மீட்புபப் பணிகள் 4 ஆவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
 
மேலும் 8000 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் உணவு, தண்ணீர் ஆகியவை கிடைக்காமல் நிவாரண உதவியை எதிர் நோக்கியுள்ளனர். 
 
இந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டின் ஏராளமான வரலாற்றுச் சின்னங்கள் தரைமட்டமாகியுள்ளன. பொது மக்கள் பயத்துடன் தொடர்ந்து சாலைகளில் வசித்துவருகின்றனர்.

இந்த நிலநடுக்கத்தால் நேபாளத்தில் 80 லட்சம்பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்