ஆபாச படத்தை வைத்து மிரட்டியவருக்கு இளம்பெண் கொடுத்த அதிர்ச்சி

திங்கள், 24 அக்டோபர் 2016 (17:09 IST)
தன்னுடைய புகைப்படத்தை, இணையத்தில் ஹேக் செய்து, தன்னை படுக்கைக்கு அழைத்த மர்ம நபர் பற்றிய தகவல்களை சமூக வலைதளத்தில் தைரியமாக வெளியிட்ட ஒரு இளம்பெண் பலரின் பாராட்டுதலை பெற்றுள்ளார்.


 

 
மும்பையை பூர்வீகமாக கொண்ட இளம் பெண் தருணா அஸ்வினி தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவருடைய இமெயிலுக்கு மும்பையை சேர்ந்த மர்ம நபர் ஒருவர் சமீபத்தில் 2 கடிதங்களை அனுப்பினார்.
 
அதில், உன்னுடைய காதலனுக்கு நீ அனுப்பிய ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நான் ஹேக் செய்துள்ளேன். என்னுடைய விருப்பப்படி நீ செயல்பட வில்லையெனில், அவை அனைத்தையும் உனது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி, அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, அதில் இணைத்து அனுப்பியிருந்தார்.
 
இதைப் பார்த்து தருணா அதிர்ச்சியடைந்தார். ஆனாலும் பயப்படவில்லை. உடனே, இந்த தகவலை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அதில், அந்த மர்ம நபரை கைது செய்ய உதவுமாறு கோரிக்கை வைத்துள்ள அவர், இதுபோன்ற சூழ்நிலையில், பெண்கள் யாருக்கும் பயப்படாமல் தைரியமாக செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
தருணாவின் இந்த தைரியமான செயலலை நெட்டிசன்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். மேலும், அந்த மர்ம நபர் குறித்து புகார் அளிக்கும்படி மும்பை காவல்துறையும் தருணாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்