மகனுக்காக மொட்டை: உலகின் சிறந்த தந்தை விருது

வெள்ளி, 24 ஜூன் 2016 (22:15 IST)
அமெரிக்காவில் மகனுக்காக மொட்டை அடித்துக் கொண்ட தந்தைக்கு சிறந்த தந்தைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.


 

 
அமெரிக்காவின் கான்கஸ் மாகாணத்தில் உள்ள விச்சிட்டா என்ற நகரில் ஜோஸ் மார்ஷல்(28) என்ற தந்தை கேப்ரியல் தனது 8 வயது மகனுடன் வசித்து வருகிறார்.
மகன் மீது தந்தை அளவுக்கடந்த பாசம் வைத்திருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் மகனின் மூளையில் கட்டி இருப்பதை அறிந்து உள்ளார்.
உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால், தந்தை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
 
அண்மையில் அறுவை சிகிச்சை நடந்த முடிந்த நிலையில், மகனின் தலையில் சிகிச்சைக்காக வெட்டப்பட்ட காயத்தின் தழும்பு தந்தையை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியது.
இதுபோன்ற தழும்பு தலையில் இருந்தால் அது மகனின் தன்நம்பிக்கையை குறைத்து தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விடும் என தந்தை ஜோஸ் நினைத்துள்ளார்.
 
உடனடியாக தனது தலையை மொட்டை அடித்துக்கொண்ட ஜோஸ் மகனின் தலையில் இருக்கும் தழும்பை போல் டாட்டூ குத்திக்கொண்டார். இதன் மூலம் தந்தையும் ஒரே மாதிரி தோற்றத்துடன் இருப்பதால் மகனுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படாது என ஜோஸ் கருதியுள்ளார்.
 
மகனுக்காக தந்தை செய்துள்ள மாற்றம் அப்பகுதியில் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இந்நிலையில், கடந்த தந்தையர் தின நாளில் புற்றுநோய் உள்ள குழந்தைகளின் தந்தைகளுக்கு மற்றும் நண்பர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியை செயின்ட் பால்டிரிக் என்ற தொண்டு நிறுவனம் நடத்தியுள்ளது.
 
இந்த நிகழ்ச்சியில் ஜோஸ் கலந்துக்கொண்டு தனது டாட்டூவை வெளிப்படுத்த அது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. ஜோஸ்க்கு ஆதரவாக 5,000 பேர் வாக்களித்ததால், அவருக்கு சிறந்த தந்தை விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்