மாநாடு ரத்துதான்.. ஆனாலும் பிரதமர் மோடியை வரவேற்கிறோம்! – ஆஸ்திரேலிய பிரதமர்!

வியாழன், 18 மே 2023 (08:48 IST)
அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த குவாட் உச்சிமாநாடு ரத்து செய்யப்பட்ட நிலையிலும், பிரதமர் மோடி ஆஸ்திரேலியா வருவார் என அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.

பசிபிக் கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் சீனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நான்கு நாடுகளும் இணைந்து ‘குவாட்’ என்ற அமைப்பை உருவாக்கின. இந்த குவாட் அமைப்பின் உச்சி மாநாடு அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்தது.

ஆனால் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு பிரச்சினைகள் காரணமாகவும், ஜப்பானில் நடைபெற உள்ள ஜி7 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்க உள்ளதாலும், அவர் குவாட் மாநாட்டில் பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து குவாட் உச்சி மாநாட்டை ரத்து செய்வதாக ஆஸ்திரேலிய பிரதமர் அறிவித்தார்.

பின்னர் பேசிய அவர், மாநாட்டை ரத்து செய்து விட்டாலும் ஜப்பானில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் குவாட் அமைப்பை சேர்ந்தவர்கள் சந்தித்து பேசிக் கொள்வோம் என்றும், மாநாடு ரத்தானாலும் ஜப்பான் பிரதமரும், இந்திய பிரதமர் மோடியும் ஆஸ்திரேலியா வர உள்ளதாகவும், அவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்